கர்நாடக அணை குறித்த சர்ச்சைப் பேச்சு... மன்னிப்பு கோரினார் ரஜினியின் சகோதரர் !
சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவது சரியான நடவடிக்கையே என்ற தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார் ரஜினியின் சகோதரரான சத்தியநாராயணா.
காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது கர்நாடகா. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும், டெல்டா மாவட்ட விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு கர்நாடகா அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காது, விவசாயம் பாதிக்கப் படும் என அவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில் வெள்ளி தேர் இழுத்து, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருச்சி வந்திருந்தார் நடிகர் ரஜினியின் மூத்த சகோதரர் சத்தியநாராயணா.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சத்தியநாராயணா, கர்நாடகாவின் அணை கட்டும் திட்டம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அதாவது, ‘கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது சரியான நடவடிக்கையே. இப்புதிய அணைகள் மூலம் இரு மாநில மக்களும் நன்மை அடைவார்கள். தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என அவர் தெரிவித்திருந்தார்.
ஊடகங்களில் வெளியான சத்தியநாராயணாவின் பேட்டி விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களிலேயே தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட சத்தியநாராயணா, மன்னிப்பும் கோரினார்.