விரைவில் மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள்.. அடுத்து மெம்பர்ஷிப்.. விறுவிறு வேலையில் ரஜினி!
அரசியல் கட்சியை முறையாக அறிவிக்கும் தனது ரசிகர் மன்றத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை விரைவில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
சென்னை : அரசியல் கட்சி தொடங்குதற்கு முன்னர் ரசிகர்மன்றத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக விரைவில் 32 மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்றத்தில் 3 அல்லது 4 நிர்வாகிகளை நியமிக்க ரஜினி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றும், மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பின்னர் களத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியானது தொடரும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த மாதம் பிப்ரவரி 21ம் தேதி ராமநாதபுரத்தில் அரசியல் கட்சியை அறிவித்துவிட்டு மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மக்களை சந்திக்க உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இது புரட்சி சுற்றுப் பயணம் இல்லை, மக்கள் பிரச்னைகள் பற்றி தான் புரிந்து கொள்வதற்கான பயணம் என்றும் கமல் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துள்ள ரஜினியும் கட்சிக்கான பணியில் தீவிரமாக உள்ளதாக தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சி அறிவிக்கும் முன்னர் தனது மக்கள் மன்றத்தில் ஒரு கோடி பேரை இணைத்துவிட வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்படுகிறார் ரஜினி.
32 மாவட்டங்களில் சுற்றுப்பயணம்
இதற்காக தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் விரைவில் ஒரு சிறிய குழுவை அனுப்பி உறுப்பினர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகளை முதலில் நியமித்து பின்னர் அவர்கள் மூலமாக உறுப்பினர் சேர்க்கையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர் மன்றத்தை சீர்படுத்த திட்டம்
ரசிகர் மனறத்தினரை கட்சியின் அமைக்குள் கொண்டு வருவதற்காக இளைஞர்கள் பாசறை, வழக்கறிஞர்கள் பாசறை, பெண்கள் பாசறை என வகைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 அல்லது 4 நிர்வாகிள ரஜினி மன்றத்தின் பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளனர்.
நேரடி ஆள்சேர்ப்பு
ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவதோடு இல்லாமல் நேரடியாக மக்கள் மத்தியில் விண்ணப்பங்களை அளித்து அவற்றை பூர்த்தி செய்து பெற்று அந்தத் தகவல்களை கணிணியில் பதிவேற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் எவ்வளவு நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்பதை வகைப்படுத்த முடியும் என்பது திட்டமாம்.
கட்சி நிர்வாகிகள் அல்ல
தற்போது ரசிகர் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவது தற்காலிகமானது தான். இந்த நிர்வாகிகளே தான் அரசியல் கட்சிக்கும் நிர்வாகிகளாக இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவே அவர்கள் தாங்களாகவே கட்சிப் பொறுப்பை கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்று ரஜினியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாகிகளுக்கும் டார்கெட்
தற்போது நிர்வாகிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கு மாவட்டத்திற்கு 5 லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்கும் அசைன்மென்ட் தான் கொடுக்கப்பட உள்ளதாம். இதில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கே கட்சியில் முன்னுரிமை என்றும் இந்த டார்கெட்டையே அடைய முடியாதவர்கள் மற்றவர்களுக்கு வழி விட்டு விலகி நிற்க வேண்டும் என்பது தான் தற்போது வரை ரஜினியின் மன்றத்தை ஒழுங்குபடுத்தி கட்சியான மாற்றுவதற்கு வைத்துள்ள திட்டம் என்று கூறுகின்றனர் அவரது நெருங்கிய சகாக்கள்.