பிரதமருக்கு ரஜினி அனுப்பிய கடிதமும் பூங்கொத்தும்!
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று, நடிகர் ரஜினிகாந்த் பூங்கொத்தும் கடிதமும் கொடுத்தனுப்பினார். ஆனால் சற்று தாமதமாக வந்ததால் அவை பிரதமரிடம் சேரவில்லை.
ஒருநாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் டெல்லி திரும்ப சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மாலை 3 மணி அளவில் வந்தார்.
அப்போது, நடிகர் ரஜினிகாந்த் சார்பில் பூங்கொத்தும், கடிதம் ஒன்றும் விமான நிலையத்துக்கு வந்தது. மோடி விமான நிலையத்துக்குள் சென்ற பிறகு, தாமதமாக அவை கொண்டுவரப்பட்டதால் மோடியிடம் சேர்க்க முடியாமல் போய்விட்டது.
இத்தகவலை பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், "பிரதமர் மோடியை வரவேற்று நடிகர் ரஜினிகாந்த் அனுப்பிவைத்த பூங்கொத்து கடைசி நேரத்தில் கொண்டுவரப்பட்டதால் மோடியிடம் சேர்க்க முடியவில்லை. இருப்பினும் இது குறித்த தகவலை மோடியிடம் தெரிவித்தோம். அதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் அனுப்பி வைத்த கடிதத்தை மின்னஞ்சல் மூலம் மோடிக்கு அனுப்பிவைத்தோம்.
அதில், "நான் வெளியூரில் இருப்பதால் உங்களைச் சந்திக்க முடியவில்லை. உங்களைச் சந்திக்க ஆர்வமாக உள்ளேன்,' என்று ரஜினி எழுதியிருந்தார்.
இதைப் படித்த பிரதமர் நரேந்திர மோடி, 'நானும் உங்களைச் சந்திக்க விருப்பமாக உள்ளேன். எப்போது டெல்லி வந்தாலும் சந்திக்கலாம்,' என்று ரஜினிக்கு மோடி பதில் தெரிவித்தார் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் பிரசாரத்துக்கு சென்னை வந்த நரேந்திர மோடி போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.