ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவார்.. தமிழருவி மணியன் உறுதி
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
திருச்சியில் காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் தமிழருவி மணியன் பேசியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் நிச்சயமாக அரசியலுக்கு வருவது என்று முடிவு எடுத்துவிட்டார். அவர் தூய்மையான அரசியலைத் தொடங்க புறப்பட்டுவிட்டார். ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றி பெற்று கோட்டையில் முதல்வராக அமரும் நாள் விரைவில் வரும். அவர் அரசியலுக்கு வருவது முடிவாகிவிட்டது.
45 சதவீத வாக்கு
ரஜினிக்கு தற்போது, 25 சதவீதம் வாக்குகள் தற்போது இருக்கிறது. அரசியல் களத்துக்கு அவர் வந்தால் 45 சதவீதம் வாக்குகளை அவர் பெறுவார். இன்று அதிமுக என்று ஒன்று இல்லை. தேர்தல் வந்தால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருவாளர் பரிசுத்தம் பன்னீர்செல்வம் கூட ஜெயிக்க மாட்டார்கள்.
ஊழலற்ற ஆட்சி
காவிரி பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினைகளை 10 ஆண்டுகளில் தீர்த்து வைப்பதே என் முதல் கனவு என்று என்னிடம் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஊழலற்ற அரசை அமைப்பது தான் எனது 2வது கனவு என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.
Recommended Video
நதிகள் இணைப்பு
மேலும், காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை எட்ட வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என ரஜினி என்னிடம் கூறியிருக்கிறார். 10 ஆண்டுகளில் நதிகள் இணைப்பைச் செய்து முடிக்க ரஜினி உறுதி பூண்டுள்ளார் என்று தமிழருவி மணியன் கூறினார்.
ஆன்மீகவாதி
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் பாஜக உங்களை இயக்குவதாகக் கூறப்படுகிறதே என்று கேள்வியை அவரிடம் எழுப்பினர். அதற்கு தமிழருவி மணியன் ‘நான் வகுப்புவாதியல்ல; ஆன்மீகவாதி" எனப் பதிலளித்தார்.
விரைவில் அரசியல் பிரவேசம்
மேலும், நாட்கள் எண்ணப்படுகின்றன; ஆட்சி முடியப்போகிறது. விரைவில் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செய்வார் என்று தமிழருவி மணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.