இன்னும் முளைக்கவே இல்லை.. ரஜினிக்கு எதிராக கொந்தளிக்கும் நாம் தமிழர்
நடிகர் ரஜினியின் கருத்துக்கு எதிராகப் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள்
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினியின் கருத்துக்கு எதிராகப் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள். ' எங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனச் சொல்லும் ரஜினி, இன்னும் முளைக்கவே இல்லை' என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மைதானத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றின் தொண்டர்களும் திரளான எண்ணிக்கையில் திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். போராட்டக் குழுவினரின் வருகை அதிகமாக இருந்ததால், வீரர்களால் மைதானத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டக் குழுவினர் மீது போலீஸார் தடியடி போராட்டம் நடத்தினர். விளையாட்டு மைதானத்துக்குள்ளும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் ஷூவை வீசினர்.
இது தொடர்பாக 21 நாம் தமிழர் கட்சித் தொண்டர்களைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. சீமான் மீதும் கொலை முயற்சி உள்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்துப் பதிவிட்ட நடிகர் ரஜினி, ' வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறைக் கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லையென்றால், நாட்டுக்கே பேராபத்து' எனக் கூறியிருந்தார். அவருடைய இந்தக் கருத்தை தமிழிசையும் அமைச்சர் ஜெயக்குமாரும் வரவேற்றுள்ளனர்.
முதல்முறையாக, சீமானின் கட்சிக்கு எதிராக ரஜினி பேசியதை அக்கட்சித் தொண்டர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ரஜினியின் கருத்துக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து சீமானிடம் சிலர் பேசியுள்ளனர். ' ரஜினியின் அரசியல் வருகைக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். நேற்று நடந்த சம்பவம், திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை. போலீஸாரின் செயல்களுக்கு எதிர்வினையாகத்தான் நடந்தது. நான் ஏதோ தாக்கியதாக எல்லாம் வழக்குப் போட்டிருக்கிறார்கள். என்னைக் கைது செய்யவும் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை ரஜினி பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார். நம்முடைய போராட்டத்தை முன்பைவிட உக்கிரமாகக் கொண்டு செல்ல வேண்டும்' எனப் பேசியிருக்கிறார் சீமான்.
இதையடுத்து, ரஜினியின் கருத்துக்குப் ஃபேஸ்புக் பக்கத்தில் பதில் கூறிய நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், ' நம்மை முளையிலேயே கிள்ளி எரியணுமாம். நாங்கள் 8 வருடத்திற்கு முன்னரே விதைத்து முளைத்து வேர்விட்டு கிளைபரப்பி வளர்ந்து உங்களை போன்ற விஷச்செடிகள் வளராமல் தடுக்கும் வல்லமையோடு நிற்கிறோம். ஒத்தையில் நிக்கிற வேங்கை மவனே.. நீங்கதான் தான் இன்னும் முளைக்கவே இல்லை.. உங்களை முளைக்கவே விடமாட்டோம். # மானத்தமிழ் மண்ணில் மராட்டியனுக்கு என்னடா வேலை?' என எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்.
அவருடைய பதிவை வரவேற்று, கருத்துப் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள்.