அன்றாட பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல முடியாதுன்னு எத்தனை முறை சொல்வது?: ரஜினிகாந்த்
எத்தனை முறைதான் சொல்வது என்று ரஜினிகாந்த் நிருபர்களிடம் கேள்வி எழுப்பினார்.
Recommended Video
சென்னை: அன்றாட பிரச்சினைகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று ஏற்கெனவே நான் சொல்லிவிட்டேன், உங்களுக்கு எத்தனை தடவைதான் சொல்வது என்று காட்டமாக ரஜினி பேசினார்.
ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அரசியல் பிரவேசம் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்தபோது அவரது பேச்சு புயலை கிளப்பியது. இதைத் தொடர்ந்து அவரிடம் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியே வரும்போது உள்ளே போகும் போது பல கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு சிலவற்றுக்கு பதில் அளிப்பார். சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருந்தார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதுபோல்தான் கடந்த 10-ஆம் தேதி இமயமலைக்கு புறப்பட்டபோது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
பெண்கள் பாதுகாப்பு
அப்போது காவிரி விவகாரம் குறித்தும் அஸ்வினி என்ற கல்லூரி மாணவி படுகொலை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நான் இன்னும் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
கமல்ஹாசன் விமர்சனம்
அமைச்சர் ஜெயக்குமாரும் பகுதி நேர அரசியல்வாதி என்று இன்று சொல்லும் ரஜின நாளை தான் ஒரு அரசியல் ஊழியர் என்று சொல்லும் காலம் வரும் என்று விமர்சனம் செய்தார். கமல்ஹாசனும் அவர் இதற்கு மட்டும்தானா நழுவுகிறார், தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் நழுவுகிறார் என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி
இந்நிலையில் இமயமலையில் இருந்து திரும்பி வந்த ரஜினி சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காவிரி குறித்தும் பெண்கள் பாதுகாப்பும் குறித்து கேட்டதற்கு முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என்று நீங்கள் சொன்ன நீங்கள் பதில் சர்ச்சையை கிளப்பியதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
எத்தனை முறை சொல்வது?
அதற்கு அவர் டிசம்பர் 31-ஆம் தேதி சொல்லிவிட்டேன். நான் இன்னும் அரசியல் களத்தில் இறங்கவில்லை என்று. இறங்கிவிட்டால் நீந்திதான் ஆகவேண்டும்.
அதுவரை அன்றாடம் நிகழும் பிரச்சினைகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று அப்பவே சொல்லிவிட்டேன். இன்னும் எத்தனை முறைதான் சொல்வது என்று கேட்டுவிட்டு சிரித்தார்.