அரசியலுக்கு பிரேக் விட்டுவிட்டு நடிகர் ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம்!
படப்பிடிப்பு, தீவிர அரசியல் பணிகளுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் நாளை இமயமலை செல்கிறார்.
Recommended Video
சென்னை : அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் நாளை இமயமலை செல்கிறார். இந்த ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது குருமார்கள், ஆன்மிக வழிகாட்டிகளை சந்தித்து ஆசி பெற ரஜினி திட்டமிட்டுள்ளார்.
3 வருடம் கழித்தே அரசியல் பிரவேசம் என்று கூறினாலும் நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய கட்சிக்கான பணிகளில் தீவிரமாக உள்ளார். ரஜினி ரசிகர் மன்ற பெயர் மாற்றம், உறுப்பினர் சேர்க்கை என்று அடுத்தடுத்து பணிகள் ஜரூராக நடந்தன.
தமிழகம் முழுவதும் மாவட்டவாரியாக ரசிகர் மன்றத்தை பலப்படுத்தும் விதமாக நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. ரசிகர் மன்றம் மூலமும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரஜினியின் தீவிர அரசியல்
கடந்த செவ்வாய்கிழமை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த், தனது அரசியல் வருகை எதற்காக என்றும், எம்ஜிஆர் போன்ற சிறப்பான ஆட்சியைத் தருவேன் என்றும் முழங்கினார். ரஜினி ரசிகர்கள் அவரது இந்த பேச்சை கொண்டாடி வருகின்றனர். அரசியல் களத்தில் ரஜினியின் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
காலா ரிலீஸ்
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து, ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0' படத்தின் இறுதிகட்ட வேலைகள், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் என்று திரையுலக பணிகளிலும் ரஜினி கவனம் செலுத்தி வருகிறார்.
நாளை இமயமலை செல்கிறார்
இந்நிலையில், ஆன்மிக பயணமாக ரஜினிகாந்த் நாளை இமயமலை புறப்படுகிறார். சென்னையில் இருந்து விமானத்தில் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர், அங்கிருந்து தர்மசாலா, உத்தராகண்ட்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ரஜினி ஒரு வார காலம் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என்று தெரிகிறது.
ஆன்மிக வழிகாட்டிகளை சந்தித்து ஆசி
இப்பயணத்தில் தனது முக்கிய ஆன்மிக வழிகாட்டிகள், குருமார்களை சந்தித்து ஆசி பெறுகிறார். ரிஷிகேஷில் பாபாஜி ஆசிரமம் ஒன்றை ரஜினி கட்டியுள்ளார். திரைப்பட வேலைகள், தொடர் மழை காரணமாக, நவம்பரில் நடந்த அதன் தொடக்கவிழாவில் ரஜினி கலந்துகொள்ளவில்லை. இப்பயணத்தின்போது அங்கும் ரஜினி செல்கிறார். அங்கு நடந்துவரும் ஆசிரம விரிவாக்கப் பணிகளை பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது.