அரசியலில் எளிதாக ஜெயிக்க ஒரு வழி உள்ளது.. இதை மட்டும் செய்வாரா ரஜினி?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் போருக்கு தயாராகுங்கள் என சொன்னாலும் சொன்னார், ஊடகங்களிலும், டீக்கடைகளிலும், சோஷியல் மீடியாக்களிலும் விவாதங்களுக்கு ஜரூராக தயாராகிவிட்டனர்.
முதல் நாள் ரசிகர் சந்திப்பு கூட்டத்தில் அரசியல் பற்றி பேசியபோது, அதிக பட்ஜெட்டில் தயாராகும் எந்திரன் 2வது பாகத்தின் விற்பனைக்கான வழக்கமான சூப்பர் ஸ்டாரின் வியாபார உத்திதான் இது என கடந்து சென்றனர் வெகுஜன மக்கள்.
ஆனால் இறுதி நாளான நேற்றும் அரசியல் பற்றி ரஜினி பேசியதை லேசாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ரஜினியின் பேச்சும், அதற்கு டெல்லி சுப்பிரமணியன் சாமி முதல், உள்ளூர் சீமான் வரை எதிர் கருத்து கூறுவதை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.
சிக்னல்கள்
ரஜினியிடமிருந்து ஏதோ சமிக்ஞைகள் வரத் தொடங்கிவிட்டன என்பதைத்தான் அவரின் அரசியல் பேச்சுக்களின் பின்னணி நிலவரம் காட்டுகிறது. ரஜினியுடன் தொடர்புள்ள மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் நாம் பேசியபோதும், அவர் அரசியலுக்கு வர வேவண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார் என்பதை போட்டு உடைத்தனர்.
குழப்பம்
தனிக்கட்சி தொடங்குவதா அல்லது, பாஜகவில் இணைவதா என்பதே இப்போது அவர் முன்னால் இருக்கும் வாய்ப்பு என்கிறார்கள். பாஜகவுக்கு அவரை இணைக்க நெருக்கடி நடப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
சிஸ்டம் சரியில்லையாம்
ஆனால் இந்த பின்னணியில் ரஜினி நேற்று கூறிய ஒரு வார்த்தை கவனிக்கத்தக்கது. ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோர் நல்ல அரசியல்வாதிகள்தான் என கூறிய ரஜினி, தேசிய கட்சிகளும் அதேபோல உள்ளதாகவும், ஆனால் சிஸ்டம் கெட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். அப்போதே, கூட்டத்தில் இருந்த ரசிகர்களை "சிஸ்டத்தை மாற்ற நீ வா தலைவா.." என உச்ச ஸ்தாபில் கோஷமிட்டதை பார்க்க முடிந்தது.
ரஜினியால்தான் முடியுமா
இதுதான் விஷயம். எத்தனை பேர் இருந்தாலும் தமிழகத்தின் சிஸ்டம் கெட்டுவிட்டது என்கிறார் ரஜினி. சிஸ்டத்தை மாற்ற ரஜினியால்தான் முடியும் என நம்பி கோஷமிடுகிறார்கள் ரசிகர்கள். அரசியல் என்ட்ரிக்கான அடித்தள வார்த்தை இது.
ரஜினி என்ன செய்வார்?
ஆனால், அதிலும் ஒரு சிக்கல் முளைக்கிறது. சிஸ்டத்தை மாற்ற ஒரே பாட்டில் பணக்காரராகும் அண்ணாமலை டெக்னிக்குகள் நிஜ உலகில் நடக்காது. ஒரு நடிகரின் தீவிர ரசிகர் வேண்டுமானால் நிஜத்துக்கும் நிழலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக இருப்பார்கள். ஆனால், வாக்களிக்கப்போவது இதை தாண்டிய வெகு ஜன மக்கள். அவர்கள் ரஜினியால்தான் சிஸ்டத்தை மாற்ற முடியும் என நம்ப வேண்டுமே, அதற்கு என்ன செய்யப்போகிறார் ரஜினி.
அனுபவம் என்ன?
"நடத்துனர் அப்புறம் நடிகர். இந்த அனுபவத்தை கொண்டு 8 கோடி மக்களை கொண்ட தமிழகத்தையும், பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கொண்டுள்ள இந்த சிஸ்டத்தை இவர் எப்படி வயதான காலத்தில் சரி செய்ய முடியும்?". அட இந்த கேள்வியை நாங்க கேட்கவில்லை, வெகுஜன மக்களின் மனதில் இதுதான் உள்ளது.
தமிழரா?
மற்றொரு முக்கிய பிரச்சினை, சீமான், பாமக மற்றும் பெரும்பான்மை மக்களிடம் எழும் கேள்வி, பிற மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஏன் தமிழக முதல்வர் பதவிக்கு ஆசைப்பட வேண்டும் என்பதுதான். கர்நாடகாவில் வாழ்ந்ததைவிட அதிகமாக சுமார் 40 வருட காலம் தமிழகத்தில் வாழ்வதால் நான் பச்சை தமிழன் என ரஜினி சொல்வது வாதத்திற்கு சரியாக இருக்கலாம். 'நடைமுறை சிஸ்டம்' அப்படியில்லை. ஏனெனில், ஒரு தமிழன் 4 தலைமுறையாக கர்நாடகாவில் வாழ்ந்தாலும், அவன் தமிழன் என்றுதான் அங்கு அழைக்கப்படுவான். 4 தலைமுறைகள் கர்நாடகாவில் வாழ்ந்தவன் ஒரு தமிழனாக இருந்தாலும், முதல்வர் பதவிக்கு அங்கு கனவில் கூட ஆசைப்பட முடியாது. வாய் திறந்து சொல்லிவிட்டாலோ..? நினைத்து கூட பார்க்க முடியாது.
சகாயம் ஒரே தீர்வு
இப்படி நிர்வாகம் மற்றும் தமிழன் என்ற இரு பெரும் பிரச்சினைகளையும் தாண்டி ரஜினிகாந்த் என்ற ஒரு ஈர்ப்பு வாக்குகளை பெற உதவும் என அவர்கள் ரசிகர்கள் நம்பினால், அதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது. நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர், நேர்மையாளர், தமிழர் என்ற அடையாளங்களை கொண்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம், ரஜினிக்கு சகாயம் வழங்க ஏற்றவர்.
செய்வாரா?
ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால், நிர்வாக அனுபவம் கொண்ட சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதுதான் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாக அமையும். அத்தனை கேள்விகளுக்கும் விடையாக இருக்க முடியும். இதைச் செய்தால் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத களத்தில் முதல்வர் கனவோடு ரஜினி வந்துள்ளார் என்ற விமர்சனத்திற்கு விடை கிடைக்கும். "தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாததை போல வாழ வேண்டும்" என்று தனது பாடல் வரிகள் மூலம் தத்துவம் கூறிய ரஜினி, நிஜ வாழ்க்கையிலும் பதவிக்கு ஆசையின்றி 'சிஸ்டத்தை' சரி செய்யும் நோக்குதான் அரசியலுக்கு வந்துள்ளார் என வெகு ஜன மக்கள் பாராட்டுவார்கள். ஒருபக்கம் ரஜினியின் கரிஷ்மா வாக்குகளை ஈர்க்கட்டும், மறுபக்கம் சகாயம் சிறப்பாக ஆட்சியை செய்யட்டும். உண்மையான ரஜினி ரசிகர்கள் இதற்கு சம்மதிக்கத்தானே செய்வார்கள்? நடக்குமா.. பொறுத்திருந்து பார்க்கலாம்!
சகாயம் ஒரு நல்ல "சிஸ்டம் அட்மின்"
உண்மையில், சகாயம் ஒரு நல்ல "சிஸ்டம் அட்மின்". நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்தவர். அதிகார வர்க்கம்தான் உண்மையில் ஆட்சியின் அடையாளம். எனவே சகாயம் போன்ற சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட, யாருக்கும் அஞ்சா, சொதப்பாத, தெளிவான, துணிச்சலான ஒரு நிர்வாகியை முதல்வராக்கினால் அது தமிழகத்திற்கு உண்மையிலேயே பலன் தரும். மறுபக்கம் ஒரு நடிகராக இந்தியா முழுவதும் தனக்குள்ள மவுசு, செல்வாக்கை வைத்து தமிழகத்திற்குத் தேவையானதை ரஜினி கொண்டு வரலாம். இதை மட்டும் ரஜினி செய்தால் காலா காலத்திற்கும் இந்த தமிழ்ச் சமுதாயம் ரஜினியை மறக்காது!
[Vote: ரஜினி தனிக் கட்சி தொடங்கி சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமா?]