கமலின் கார் கதவை மூடி வழியனுப்பிய ரஜினி... சிகரத்தை தொட்டாலும் ஈகோ இல்லாத செயல்பாடு
கமலின் கார் கதவை மூடி வழியனுப்பிய ரஜினியின் செயல்பாடு அவர் புகழின் உச்சத்துக்கே போனாலும் ஈகோ, இமேஜ் பார்க்காத மனிதராக நட்பின் அடையாளமாக இன்னும் இருந்து வருகிறார் என்பது தெரிகிறது.
Recommended Video
சென்னை: கமலின் கார் கதவை மூடி ரஜினி வழியனுப்பியதை பார்க்கும் போது என்னதான் அரசியலிலும் சினிமாவிலும் அவர்கள் வேறு பாணியை கடைப்பிடித்தாலும் அதை தாண்டியது அவர்களது நட்பு என்பதை வெளிப்படுத்தியது.
ரஜினி எளிமைக்கு உதாரணமாக இன்றும் திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் கர்நாடக மாநிலத்தில் கன்டெக்டராக பணியாற்றிய போது அவர் யாருடன் எல்லாம் பணி புரிந்தாரோ அவர்களுடன் சரி சமமாக சூப்பர் ஸ்டார் என்று புகழின் உச்சத்தில் இருக்கும் போதும் பழகி வந்தார் என்பது ஊரறிந்த உண்மை.
ரசிகர்கள் என்று வந்துவிட்டால் அவர்களை தெரியாவிட்டாலும் ஏற்கெனவே பழகியவர் போல் உரிமையுடன் நலம் விசாரிக்கும் பாங்கு இருப்பதாலும் , தான் கடந்து வந்த எளிமையான வாழ்க்கையை இன்னும் மறக்காமல் இருப்பதற்காகவும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
ரஜினி வருகை
இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினி தற்போது தான் அரசியலுக்கு வருவதை ஒப்புக் கொண்டுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்தார்.
நீண்ட கால நட்பு
ரஜினியும் கமலும் ஆரம்ப காலத்தில் இருந்தே நட்புடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசனும் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இருவரும் இணைவதை காலம்தான் பதில் சொல்லும் என்று இருவரும் அவர்களுக்கே உரித்தான பாணியில் தெரிவித்து விட்டனர்.
வருங்கால அரசியல்வாதிகள்
இன்று ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் கமல் சந்தித்து மதுரையில் நடத்தவிருக்கும் பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அப்போது பேச்சுவார்த்தைக்கு பிறகு, கமலை வாசல் வரை வந்து வழியனுப்பினார் ரஜினி.
ஈகோ பார்க்காத மனிதர்
அப்போது கமல் காரில் ஏறி உட்கார்ந்தும் ரஜினி அவரது கார் கதவை மூடிவிட்டார். இது எளிமையின் உச்சம். இமேஜ் மற்றும் ஈகோ பார்க்காத மனிதராகவே இன்னமும் இருந்து வருகிறார் ரஜினி. இருவரும் என்னதான் நடிகர்கள் என்றாலும் வருங்கால புதிய அரசியல்வாதிகள் என்பதை தாண்டி அவர்களுக்கு இடையே உள்ள நட்பையே இந்த சம்பவம் பிரதிபலிக்கிறது.
கமலும் ஈகோ பார்க்காதவர்
சிவாஜி மணி மண்டப விழாவில் கமல் குறித்து ரஜினி கூறிய கருத்துகள் அவருக்கு எதிரான விமர்சனமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் மறந்து 40 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நட்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரஜினியை சந்தித்து விட்டு சென்றார் என்றால் சும்மாவா என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.