குன்றத்தூர் அபிராமியின் கணவர் விஜய்யை நேரில் அழைத்து ரஜினி ஆறுதல்
Recommended Video
சென்னை: குன்றத்தூர் அபிராமியின் கணவர் விஜய்யை நேரில் அழைத்த ரஜினிகாந்த் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் அபிராமிக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனால் குழந்தைகள் இருவரையும் கடந்த 31-ஆம் தேதி அபிராமி கொன்றுவிட்டு திருவனந்தபுரத்துக்கு தப்பியோடினார். இதையடுத்து அபிராமியை நாகர்கோவிலுக்கு வரவழைத்த போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்தனர்.
அபிராமியின் கணவர் விஜய் ரஜினியின் தீவிர ரசிகர். விஜய்யின் குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து கேள்விப்பட்ட ரஜினி அவரை தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரவழைத்தார்.
அவரை பார்த்து துக்கத்தை அடக்க முடியாமல் அழுத விஜய்க்கு தோளில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார் ரஜினி.