ஜல்லிக்கட்டு, ஐபிஎல் போராட்டங்களின் போது மக்கள் மீது தடியடி நடந்ததே... அதெல்லாம் தெரியாதா ரஜினி?
ஜல்லிக்கட்டு, ஐபிஎல் போராட்டங்களின் போது மக்கள் மீது தடியடி நடந்ததே... அதெல்லாம் தெரியாதா ரஜினி?
Recommended Video
சென்னை : ஐ.பி.எல் போட்டிகள் சென்னையில் நடத்தக்கூடாது என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் எதிர்பாராதவிதமாக காவலர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை நடிகர் ரஜினிகாந்த் கடுமையாக சாடியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் காவலர்கள் மீது நடத்தப்பட்டது வன்முறையின் உச்சம் என கொந்தளித்துள்ளர் ரஜினிகாந்த். ஆனால், இவரது கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு சமூக வலைதளங்களில் கிளம்பியுள்ளது.
போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஜினி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், அதே ஐ.பி.எல் போட்டி நடத்தக்கூடாது என்ற போராட்டத்தில் திரையுலகினர், பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஏன் ரஜினி கருத்து சொல்லவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. போராட்டத்தில் பங்கேற்று கோஷம் எழுப்பிய இயக்குநர்கள் வெற்றிமாறன், களஞ்சியம் ஆகியோர் காவல்துறையால் தாக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் இரவு விடுதலை செய்யப்பட்டனர். நியாயத்திற்காக போராடினால் தாக்குதல்தான் பரிசு என்று இயக்குநர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
அதேபோல், போராட்டக்காரர்களை போலீசார் ஒடுக்கும் போது, செய்தி எடுத்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறைக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ரஜினிகாந்த் ஏன் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை கண்டிக்கவில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
அப்போது பொங்கவில்லையே?
திருச்சியில் விரட்டிச்சென்று, கர்பிணி உஷா பயணித்த இருசக்கரவாகனத்தை போக்குவரத்து காவலர் எட்டி உதைத்ததால் உஷா சம்பவ இடத்தில் மரணம் அடைந்தார். அதேபோல், கடந்த வாரம், தி.நகரில் தாய், சகோதரியின் கண் முன்னால், இளைஞரை போலீசார் கட்டிவைத்து அடித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து ரஜினி மவுனம் காத்தது ஏன்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.
மெரினா போராட்ட தடியடி
மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, நடந்த மெரினா அறவழியில் நடந்த போராட்டக்காரர்களை போலீசார் தாக்கி விரட்டினர். அப்போது ரஜினிகாந்த் ஏன் வன்முறைக்கு எதிராக குரல்கொடுக்கவில்லை.
போலீசார் ஆட்டோக்களுக்கு தீ வைத்தனரே
வன்முறையின் போது போலீசாரே ஆட்டோக்களுக்கு தீவைத்த காட்சிகள் வெளியாகின. அந்தக்காட்சிகளை டுவிட்டர் மூலம் வெளியிட்ட கமல்ஹாசன் காவல்துறையை கண்டித்திருந்தார். ஆனால் அப்போதும் ரஜினிகாந்த் அமைதியாக இருந்தார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
ஒரு சார்பாக கண்டனம் ஏன்?
சக சினிமாத்துறையினர், பத்திரிகையாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ரஜினி கண்டிக்கவில்லை. மாறாக போலீசாரின் ஒரு முகத்தை மட்டும் கண்டு அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.