ரஜினிகாந்துக்கு தகுதி இல்லை என்பதா? சரத்குமார் கொடும்பாவியை எரித்த ரசிகர்கள்
ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து சரத்குமார் தெரிவித்த கருத்துகளால் கொந்தளித்து போயுள்ளனர் ரஜினி ரசிகர்கள். தமிழகத்தில் பல இடங்களில் சரத்குமார் கொடும்பாவியை ரஜினி ரசிகர்கள் எரித்தனர்.
சென்னை: தமிழக அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்துக்கு தகுதி இல்லை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியிருப்பது ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. சரத்குமாரின் இப்பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல இடங்களில் அவரது கொடும்பாவியை எரித்தனர் ரஜினிகாந்த் ரசிகர்கள்.
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு பரபரப்பை கிளப்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சரத்குமார், ரஜினிகாந்துக்கு தமிழக அரசியல் பற்றி பேச தகுதி இல்லை; ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதல் ஆளாக எதிர்ப்பேன் என கூறியிருந்தார்.
சரத்குமாரின் இந்த பேட்டி ரஜினிகாந்த் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. சரத்குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல இடங்களில் அவரது கொடும்பாவியை ரஜினிகாந்த் ரசிகர்கள் நேற்று எரித்து போராட்டங்களை நடத்தினர்.