ரஜினியை பார்க்கத் திரண்ட ரசிகர்கள்... போயஸ்கார்டனில் தள்ளுமுள்ளு!
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரை பார்க்க ரசிகர்கள் திரண்டதால் போலீசார் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் ரசிகர்கள் திரண்டனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்களை போலீசார் வெளியேற்றியதால் ரசிகர்கள் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திரைத்துறையில் தொடக்கம் முதலே கதாநாயகனாக வலம் வரும் நடிகர்களில் ஒருவரும், தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமுமான நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
இன்று காலை 6 மணி முதலே ரஜினி ரசிகர் மன்றத்தினர் ரசிகர் மன்றக் கொடியை கையில் ஏந்தியவாறு போயஸ் கார்டன் நுழைவு சாலையில் இருந்து ரஜினி இல்லம் நோக்கி அணி அணியாக வரத் தொடங்கினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லம் வரை ரசிகர்கள் திரண்டு நின்றதால் முன் எச்சரிக்கையாக ரசிகர்களை போலீசார் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றினர்.
ரஜினி இல்லத்தை இணைக்கும் மற்றொரு சாலையான ராதாகிருஷ்ணன் சாலை அருகே ரசிகர்களை போலீசார் வெளியேற்றிவிட்டனர்.இதனால் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் ரசிகர்கள் யாரும் கலைந்து செல்லாமல் அங்கேயே காத்திருக்கின்றனர்.
கடந்த பிறந்தநாளின் போது ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் திடீரென ரசிகர்கள் மத்தியில் தோன்றி பேசினார். அது போன்றே இந்த முறையும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பேசுவார் என்ற எதிர்பார்ப்பால் ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.