என்னமா பின்றாங்கப்பா.. சென்னையை கலங்கடிக்கும் ரஜினிகாந்த் அரசியல் போஸ்டர்கள்!
Recommended Video
சென்னை: அரசியலுக்கு, இன்று வருவார், நாளை வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து, கண்கள் பூத்துப்போயுள்ள நிலையில், போஸ்டரிலாவது தங்கள் தலைவர் ரஜினியை முதல்வராக்கி அழகு பார்க்கலாம் என நினைத்து அவரது பிறந்த நாளான இன்று சென்னை முழுக்க அசத்தல் போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் என திரையுலக ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று 67வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆக்டிவ் ஆரசியலில் ஈடுபடவில்லை. அதிமுகவில் ஆளுமையாக இருந்த ஜெயலலிதா மறைந்து ஓராண்டாகிவிட்டது.
அரசியல் ஆசை
இது அரசியலில் வெற்றிடங்களை ஏற்படுத்தியுள்ளது. இதை நிரப்ப இப்போது ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் அவா. 67வது பிறந்த நாளில் அதை அறிவிப்பார் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். போர் வரும்போது பார்த்துக்கலாம், ரெடியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சில மாதங்கள் முன்பு ரஜினி பேசிய பேச்சு ரசிகர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி வைத்துள்ளது.
அடி தூள்
இந்த நிலையில், ரஜினி பிறந்த நாளை வழக்கத்தைவிட வித்தியாசமான போஸ்டர்களால் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள். அதில் சென்னையில் ஒட்டப்பட்ட சில சுவாரசிய போஸ்டர்கள் அவரை அரசியலுக்கு அழைப்பதை போலவும், சில அவர் ஏற்கனவே முதல்வராகி விட்டதை போலவும் எல்லாம் இருந்தன.
ரைமிங், டைமிங்
ஒரு போஸ்டர் இப்படி சொல்கிறது: "வெற்றிடத்தை நிரப்ப வெத்தலை பாக்கு வைத்து அழைக்கிறோம்" என்று நடப்பு அரசியல் சூழ்நிலைக்கு, டைமிங்கோடு நல்ல ரைமிங்காகவும் இருந்தது.
நாளைய முதல்வரே
இன்னொரு போஸ்டரில் 'நாளைய முதல்வரே' என்று எழுதப்பட்டு ரஜினிகாந்த் ஸ்டைலாக நடந்து செல்லும் காட்சியும், பின்னணியில் ஜார்ஜ் கோட்டையும் காணப்பட்டது. என்னமா கூவுறாங்கப்பா இவுங்க என்ற சினிமா காட்சியை நினைவுபடுத்தியது.
பதவியேத்தாச்சா
மற்றொரு போஸ்டரில் த.அ (தமிழ்நாடு அரசாம்) என்ற எழுத்து பொறிக்கப்பட்ட மைக்கில் ரஜினி கையை உயர்த்தியபடி உள்ளார். பின்னணியில் 'மாண்புமிகு ரஜினிகாந்த் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா' என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது ரஜினி முதல்வராக பதவியேற்கும் விழாவை அப்படியே நமது கண்முன் நிறுத்தியிருக்கிறார்களாம்.
இப்படி ஒரு மகிழ்ச்சியா
அரசியலுக்கு வருவார், முதல்வராவார் என்றெல்லாம், 'தூதுவன் வருவன், சேதி தருவன்' என்று எதிர்பார்த்த 'ஆயிரத்தில் ஒருவன்' சோழ ராஜா, பார்த்திபன் கதாப்பாத்திரம் போல ரசிகர்களும் எதிர்பார்த்து ஏமாந்துவிட்டனர். எனவே போஸ்டரிலாவது ரஜினியை முதல்வராக்கி அழகு பார்க்கலாம் என நினைத்துவிட்டனர். ரசிகர்கள் எதிர்பார்ப்பு இனியாவது நிறைவேறுமா, ஆண்டவன் சொல்வானா, 'அருணாச்சலம்' செய்வாரா என்பதெல்லாம் இனி வரும் காலங்களில் பார்க்கலாம்.