ரஜினிகாந்த், கஸ்தூரி ராஜா மீது மோசடி புகார் தொடர்ந்து கடுப்பாக்கியவர் போத்ரா.. பரபர பின்னணி
இயக்குனர் கஸ்தூரி ராஜா மீது காசோலை முறைகேடு புகார் கூறியதோடு அதில் ரஜினிகாந்தையும் இழுத்துவிட்டு பிரச்னையை கிளப்பியவர் தான் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள சினிமா பைனான்சியர் முகுன்சந்த் போத்ரா
சென்னை : திரைத்துறையினருக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வந்த பைனான்சியர் போத்ரா, இயக்குனர் கஸ்தூரி ராஜா, ரஜினி மீது மோசடி புகார் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்.
திரைத்துறையினருக்கு பைனான்ஸ் உதவி செய்யும் பணியை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்துள்ளார் முகுன்சந்த் போத்ரா. அதிக வட்டிக்கு பணம் சம்பாதிக்கிறார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு.
போத்ரா மீது பலர் குற்றம் சுமத்திய நிலையில் ஓட்டல் அதிபர் கணபதி மற்றும் சினிமா படத் தயாரிப்பாளர் சதீஷ் உள்ளிட்ட 2 பேர் தங்களிடம் போத்ரா அதிக வட்டி வசூலிப்பதாக போலீசில் புகார் அளித்தனர்.
கந்து வட்டி வசூல் நிரூபணம்
இதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் போத்ராவை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ரூ. 2 கோடிக்கும் அதிகமான வட்டித்தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெற்றிருப்பது உறுதியானதையடுத்து போத்ரா மீது மோசடி, கந்துவட்டி வசூல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போத்ரா மகன்களும் கைது
இந்த மோசடிக்கு உதவியதாக போத்ராவின் மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தந்தை போத்ராவிடம் கடன்வாங்கியவர்களை மிரட்டி பணம் வசூலித்து வந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஸ்தூரி ராஜா மீது வழக்கு
இயக்குனர் கஸ்தூரி ராஜா தன்னிடம் ரூ.65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 34 லட்சம் தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தவர் போத்ரா. இதே போன்று கஸ்தூரி ராஜாவின் சம்மந்தியும் நடிகருமான ரஜினிகாந்தின் பெயரைக் குறி பணம் பெற்று மோசடி செய்ததாக மற்றொரு வழக்கும் தொடர்ந்திருந்தார்.
ரஜினியை சீண்டிய போத்ரா
இந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். அப்போது இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக போத்ரா தொடர்ந்த செக் மோசடி வழக்கை ஏற்கனவே ஜார்ஜ் டவுண் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதை ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார்.மேலும் தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படும் விதமாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டதையடுத்து, இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.