ஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் 'ஸ்டிக்கர்'.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்
மயிலாடுதுறை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கிவரும் நிவாரணப் பொருட்களில் அவரது புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு சென்னையில், கன மழை மற்றும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, மீட்புப்பணிகளில் ஈடுபட்ட அதிமுகவினர், வழங்கிய நிவாரணப் பொருட்களில், அப்போது முதல்வராக இருந்த, ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் கூட, கேலி செய்து காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.
காவிரி டெல்டாவே கலங்கி கிடக்கிறது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கஜா.. கூஜா என ஜோக்கடிக்கிறார்!
|
ரஜினி படம்
இந்தநிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கியுள்ள உணவுப் பொட்டலங்களில் ரஜினியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
ரஜினி மக்கள் மன்றம்
'ரஜினி மக்கள் மன்றம், நாகை மாவட்டம்' என்று மேலே ஸ்ட்டாம்ப் அச்சிடப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வழங்கிய நிவாரணப்பொருட்கள் தங்களின் சொந்த பணத்தில் வழங்கப்பட்டதுதான் என்பதால், பெயர் பொரிக்கப்பட்டதில் தப்பு இல்லை என்று, அவரது ரசிகர்கள் வாதிடுகிறார்கள் .
மனிதாபிமான உதவி
ஸ்டிக்கர்களை ஒட்டி, தயார் செய்து கொண்டிருந்த நேரத்தில், உணவுகளை விரைந்து சப்ளை செய்திருக்கலாம் என்றும், மனிதாபிமான நடவடிக்கைகளின்போது, விளம்பரத்திற்காக, ஸ்டிக்கர் ஒட்டுவது தவறு என்றும் சமூக நோக்கர்கள், மற்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.
அவுங்க மாறியாச்சி, நீங்க
அதிமுகவினரை போலவே ரசிகர் மன்றத்தினர் இப்போது செயல்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. கஜா புயல் மீட்பு நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிச்சாமி அரசு சிறப்பாக செயல்படுகிறது, ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று பல தரப்பிலும் பாராட்டுகள் கிடைத்து வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினர் இவ்வாறு செய்யலாமா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.