அன்று அந்த பாட்ஷா பட விழாவில்.. இன்று ஆர்.எம்.வீ. வீட்டில்.. ஒரு பிளாஷ்பேக்!
ரஜினியின் அரசியல் பேச்சு அன்று பாட்ஷா படவிழாவில் தொடங்கி இன்று ஆர்.எம்.வீரப்பன் வீட்டில் வந்து நிற்கிறது.
Recommended Video
சென்னை: ரஜினி அரசியல் பேசிய முதல் நிகழ்வு, பாட்ஷா படவிழா. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது என்று பேசியிருந்தார் ரஜினி. அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன். ரஜினி, ஆர்எம்வீ உறவு என்பது மிக நீண்டது, நெடியது.
கடந்த 31-ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தான் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து வைத்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாகவும் கூறியுள்ளார் ரஜினி.
ஆன்மீக அரசியல் என்ற ரஜினி பயன்படுத்திய ஒற்றை சொல்லானது இன்னும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வளர்ந்து கொண்டே உள்ளது. தற்போது தலைவர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார் ரஜினி.
ரஜினி சந்திப்பு
நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு தனது அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் கூறி ஆசி பெற்றார். இது பழுத்த அரசியல்வாதியான கருணாநிதியிடம் ஆசி பெற்றார் என்பது சொல்வதை விட தான் நடத்த போவது மதவாத அரசியல் அல்ல என்பதற்கான சேம்பிளாகவே பார்க்கப்படுகிறது.
ரஜினியுடன் ஆர்எம் வீரப்பன்
இன்று எம்ஜிஆர் மன்றத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த் அவரை சந்தித்து பேசியுள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பியவர் என கூறப்படும் ஆர்எம் வீரப்பன் அமைச்சராக இருந்தபோது அவரது முன்னிலையில்தான் ரஜினி ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதுகுறித்த பிளாஷ்பேக் இங்கே....
ஜெ மீது ரஜினி அதிருப்தி
கடந்த 1991- ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ரஜினியின் வாகனத்தை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது முதல் ஜெயலலிதா மீது ரஜினிக்கு அதிருப்தி நிலவி வந்தது. இந்நிலையில் 1992-ஆம் ஆண்டு அண்ணாமலை திரைப்படத்தின் போஸ்டர்களை ஒட்டவும் அவர் தடை விதித்தார். மேலும் அந்த படத்தில் வரும் அரசியல் வசனங்கள் அனல் பறந்தன.
ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில்...
மணிரத்னம் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாட்ஷா படத்தின் தயாரிப்பாளரும் ஜெ.அமைச்சரவையில் இடம்பெற்றவருமான ஆர்.எம். வீரப்பன் கடந்த 1995-ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்பட விழாவில் தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவத் தொடங்கியதற்கு அறிகுறியே மணிரத்னம் அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் என்றார். இதை ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் எதிர்க்கவில்லை. இதனால் ஜெயலலிதா கோபம் அடைந்தார். பின்னர் ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவியை பறித்தார். இது மேலும் ரஜினிக்கு கோபத்தை வரவழைத்தது.
சிவாஜி பெயர்
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1995-ஆம் ஆண்டு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் ஜெயலலிதா, ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது புதிதாய் தொடங்கப்பட்ட திரைப்பட நகருக்கு "ஜெ. ஜெ. திரைப்பட நகர்' என்று பெயர் வைத்திருந்தனர். இந்த விழாவில் ரஜினி பேசுகையில் புதிதாகத் திறக்கப்பட்ட இந்த நகருக்கு எம்ஜிஆர் அல்லது சிவாஜி நகர் என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும் என்றார். தான் கலந்து கொண்ட விழாவில் தன்னை எதிர்த்து ரஜினி கருத்து தெரிவித்ததால் ஜெயலலிதாவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
ஜெ.வுக்கு எதிரான பேச்சு
கடந்த 1996-ஆம் ஆண்டு ரஜினி பேசுகையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் இனி தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றார். எனவே திமுக - தமாகா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். ரஜினியின் அனல் பறந்த வசனங்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் ரஜினியின் வாய்ஸுக்கு ஏற்ப வாக்களித்ததில் அந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆர்எம் வீரப்பன் கலந்து கொண்ட கூட்டம்தான் ரஜினி அரசியல் பேச தொடக்க புள்ளியாக இருந்தது. அந்த வகையில் அவர் இன்றும் ஆர்எம் வீரப்பனை சந்தித்தால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.