எடப்பாடி, பொன்னார், ரஜினி மூவரையும் இயக்கும் ஸ்விட்ச் ஒரே இடத்தில் இருக்கிறது: டி.கே.எஸ் இளங்கோவன்
எடப்பாடி, பொன்னார், ரஜினி மூவரையும் இயக்கும் ஸ்விட்ச் ஒரே இடத்தில் இருக்கிறது என்று டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : எடப்பாடி பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்த் மூவருக்குமான கட்டளை ஒரே இடத்தில் இருந்து வருகிறது என்று திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இன்னும் பலர் குண்டடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், போராட்டத்தில் சமூக விரோதிகளின் வன்முறையே துப்பாக்கிச்சூடு நடந்ததற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறுகையில், ரஜினியின் பேச்சு பாஜகவிற்கு ஆதரவாக இருக்கிறது. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையிலும் துப்பாக்கிசூடு குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
பொன்.ராதாகிருஷ்ணனும் போராட்டத்தில் சமூக விரோதிகள் இருந்தனர் என்று குறிப்பிட்டு இருந்தார். ரஜினியும், பொன்.ராதாகிருஷ்ணனும் உயிரிழந்த 13 பேரில் யார் சமூக விரோதிகள் என்று விளக்கம் தர வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய மூன்று பேருக்குமான உத்தரவு ஒரே இடத்தில் இருந்து வருகிறது. அதன்படி அவர்கள் செயல்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.