சோபியா விவகாரம் குறித்து ரஜினியிடம் கருத்து கேட்ட நிருபர்கள்.. கிடைத்த ஷாக் பதில்
Recommended Video
சென்னை: மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.
மாணவி சோபியா என்பவர், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்திறங்கியபோது, அருகே இருந்த பாஜக மாநில தலைவர் தமிழிசையை பார்த்து, பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து விமான நிலையத்தில் வைத்து, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சோபியாவிடம் வாய் தகராறு செய்தார் தமிழிசை.
பரபரப்பு சம்பவம்
மேலும், சோபியா மீது காவல் நிலையத்திலும் தமிழிசை புகார் அளித்தார். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ், பாமக தலைவர்கள் மட்டுமின்றி, மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் தமிழிசைக்கு கண்டனத்தை பதிவு செய்தனர்.
ரஜினி மட்டும் கருத்து இல்லை
ஆனால், இதுவரை ரஜினிகாந்த் மட்டும் கருத்து கூறாமல் இருந்து வந்தார். கூடிய சீக்கிரம் அரசியல் கட்சி துவங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்ததால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனாலும், ரஜினிகாந்த் ட்விட்டரில் கூட கருத்து கூறவில்லை. இதனிடையே அடுத்தகட்ட படப்பிடிப்பில் பங்கேற்க உத்தரபிரதேசம் செல்வதற்காக, ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
ஏர்போர்ட்டில் பேட்டி
ரஜினிகாந்த்தை பார்த்த நிருபர்கள்கள், அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர். நிற்காமல் நடந்தபடியேதான் அவற்றுக்கு பதில் அளித்தார், ரஜினிகாந்த். ரஜினிகாந்த்திடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்களை பாருங்கள்.
கேள்வி: அரசியல் கட்சியை எப்போது துவங்குவதாக உள்ளீர்கள்?
பதில்: அதற்கு நிறையவாட்டி பதில் சொல்லியாச்சி கண்ணா.
ரெய்டுக்கும் பதில் இல்லை
கேள்வி: அமைச்சர்கள், அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இல்லைங்க, அதுபற்றி எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார். தமிழகம் முழுக்க இருநாட்களாக ரெய்டு செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.
கருத்து இல்லை
கேள்வி: சோபியா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்களே அதுபற்றி?
பதில்: நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தாங்க்ஸ். இவ்வாறு ரஜினிகாந்த் பதிலளித்தார். சோபியா விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.