இதற்காகவே ரஜினிக்கு பெரிய சபாஷ் போடலாம்!
ரஞ்சித்துடன் பயணிக்கும் ரஜினிக்கு பெரிய சபாஷ் போட வேண்டும்.
Recommended Video
சென்னை: இயக்குநர் ரஞ்சித் உருவாக்கும் படைப்பு அம்பேத்கரிய, பெரியாரிய, கம்யூனிச சிந்தனை கொண்ட படம் என்பதை வெளிப்படையாக தெரிந்தும் தயக்கமே இல்லாமல் அவருடன் பயணிக்கும் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுக்குரியவர்தான்.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகாலம் உச்சநட்சத்திரமாக கோலோச்சுகிறவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் படங்கள் பெரும்பாலும் அரசியலைத் தவிர்த்த ஒன்றாக இருக்கும். ஒருசில படங்களில் மேலோட்டமானதாக அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருக்கலாம். ரஜினியைப் பொறுத்தவரை தம்மை மக்களை மகிழ்விக்கிற ஒரு கலைஞனாக, தம்மை நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரக் கூடிய ஒரு முழு வணிகக் கலைஞனாகவே சினிமா உலகத்தில் அடையாளப்படுத்திக் கொண்டவர்.
குடும்ப உறவுகளைப் பேசிய அளவுக்கு ரஜினியின் படங்கள் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக காலாவைப் போல இதுவரை தகித்தது கிடையாது. தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் சிலர் விரல் விட்டு எண்ணும் படங்களில் தலித்துகளாக நடித்துள்ளனர். அதை மறுக்க முடியாது.
ஜாதி ஆணவம்
ஆனால் பெரும்பாலான தமிழ் சினிமா தலித்துகளை ஒரு அடிமைச் சமூகமாகவே சித்தரித்திருக்கிறது. இந்த தமிழ் சினிமாவில் தேவர் மகன், கவுண்டர் வீட்டு பொண்ணு என எகத்தாளமாக ஜாதி ஆணவத்தை பேசியிருக்கிறது. தலித்துகளை தசாவதாரங்களில் கருப்பர்களாகத்தான் காண்பித்திருக்கிறது.
சமூக அமைப்பு எதிரொலி
சமூக அமைப்பு முறையை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் உயர்ஜாதியினரை உயர்த்தித்தான் பிடித்திருக்கிறது. போராளிகள் என்றால் சபலப் புத்தியாளர்கள்; தலித்துகள் என்றால் அடிமையாளர்கள் என்கிற இத்துப் போன அகராதியைத் தூக்கிக் கொண்டு திரிவதுதான் தமிழ் சினிமா.
மரபு உடைத்தல்
இந்த சினிமா மரபை உடைக்கும் போக்குகள் அவ்வப்போது வெளிப்படுவது உண்டு. தென்றல் படத்தில் பறையின் உயர்வை சித்தரிக்கும் அற்புதமான பாடல் நாடி நரம்புகளை முறுக்கேற்றும். இப்படி அத்திபூத்தாற்போல தலித்துகளை நாயகர்களாக்கும் தமிழ் சினிமாவின் போக்கை தகர்க்கிற நாயகனாக இயக்குநர் ரஞ்சித்தின் பயணம் இருந்து வருகிறது.
நடிகர்களின் தயக்கம்
எங்கே தலித்துகளின் கதாபாத்திரத்தை ஏற்றால் பிற ஜாதி ரசிகர்கள் அதை விரும்பமாட்டார்களோ என்கிற மாய மயக்கத்தில் முன்னணி நடிகர்களும் இருந்து வருகின்றனர். ஆனால் அப்படியான மயக்கத்தை தகர்த்து ரஞ்சித்தின் அரசியல் எது என்பதை தெள்ளத் தெளிவாகவே உணர்ந்து உச்சநட்சத்திரமாக இருந்த போதும் துணிவுடன் தலித்துகளின் வாழ்வியலையும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு தலைவன் பாத்திரத்தையும் ரஜினிகாந்த் ஏற்றிருப்பது பாராட்டுக்குரியதுதான்.
ரஜினிக்கு பாராட்டு
அத்துடன் ரஜினிகாந்தின் திரை பயணத்தில் இப்படியான ஒரு விடுதலை அரசியலை வலிமையான அரசியலை தமக்கு உடன்பாடே இல்லாத அரசியலை வணிகத்துக்காகவேனும் முதல் முறையாக உரத்து பேசியிருப்பது நிச்சயம் பாராட்டுதலுக்குரியது. இனியேனும் தலித்துகளின் கதா பாத்திரங்கள் அவர்களும் நம்மைப் போல சக மனிதர்களே எனும் மனோபாவத்தை தமிழ் சினிமாவில் ஆணித்தரமாக உருவாக்க ரஞ்சித்- ரஜினிகாந்த் கூட்டணி அடித்தளம் போட்டிருப்பதற்கும் பாராட்ட வேண்டும்.