போர் வரும் போது பார்த்துக் கொள்வோம்... விசிலடித்து வரவேற்ற ரஜினி ரசிகர்கள்
போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று ரஜினி கடந்த மே மாதம் தெரிவித்தது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சென்னை: போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று ரஜினி பேசிய வார்த்தை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இது தமிழகம் முழுவதும் ஹாட்டாப்பிக்காக இருந்தது.
கடந்த 20 ஆண்டுகளாக ரஜினியை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து வருகின்றனர். ஆனால் அவரோ பிடி கொடுக்காமல் இருந்து வந்தார். மேலும் 1996-இல் கிடைத்த பொன்னான வாய்ப்பையும் ரஜினி நழுவ விட்டது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த ஆண்டில் ரஜினியின் அரசியல் பேச்சும் அதனால் ஏற்பட்ட தாக்கமும் குறித்து பார்ப்போம்.
ரஜினி ரசிகர்களை சந்திப்பு
கடந்த மே மாதம் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை 8 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் நடிகனாக வேண்டும் என்று ஆண்டவன் நினைத்தான். அதன்படியே ஆனது. நாளை நான் என்னவாவேன் என்று அவன் நினைப்பானோ அதன்படி நடப்பேன்.
சிஸ்டம் சரியில்லை
அரசியலில் இறங்க எனக்கு பயம் என்கிறார்கள். ஒரு ஆற்றுக்குள் இறங்கும்போது முதலை இருந்தால் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் என்று கூறுவது புத்திசாலித்தனமா, இதுதான் தைரியமா. தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை.
நல்லது செய்ய...
சிஸ்டத்தை சரி செய்ய மு.க. ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி உள்ளிட்டோர் இருக்கின்றனர். தமிழக மக்கள்தான் என்னை வாழ வைத்தனர். இன்று நான் கார் , பங்களா என வசதியோடு இருக்க காரணமும் அவர்கள்தான். அந்த தெய்வங்களுக்கு நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
எனக்கும் உங்களுக்கும் தொழில்
எனக்கும் படத்தில் நடிக்கும் தொழில் உள்ளது. உங்களுக்கும் உங்கள் தொழில், குடும்பம் என உள்ளது. எனவே தற்போது சென்றுவிட்டு போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றார். ரஜினி அரசியலுக்கு வர விரும்புவதாக அவரது நண்பர் ராஜ்பகதூர் உறுதிப்படுத்தினார்.
தமிழருவிமணியன்
திருச்சியில் ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்ட மாநாடு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ரஜினி அரசியலுக்கு வருவதற்கான காரணங்களை எடுத்துரைத்தார். அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று உறுதிப்பட தெரிவித்தார். இந்த சம்பவங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.