அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று இலங்கை பயணம் ரத்து: ரஜினிகாந்த்
அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன், வைகோ, வேல்முருகன் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை ஏற்று இலங்கை பயணத்தை ரத்து செய்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னை: அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று என்னுடைய பயணத்தை ரத்து செய்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் இந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
பயணம் திடீர் ரத்து
இதனை ஏற்று தனது பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்வதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன், வைகோ, வேல்முருகன் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று நான் இந்த பயணத்தை ரத்து செய்கிறேன்.
முழுமனதாக ஏற்கவில்லை
எனினும் அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்புடையது அல்ல. அதை நான் முழுமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. நான் அரசியல்வாதி அல்ல, கலைஞர். நண்பர் திருமாவளவன் கூறியதை போல கலைஞர்களுக்கு எல்லை இல்லை.
அரசியலாக்க வேண்டாம்
வருங்காலத்தில் இலங்கை செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை அரசியலாக்கி தடுத்து விட வேண்டாம். ஈழத்தமிழர்கள் களமாடிய புனித போர் நிகழ்ந்த பூமியை காண ஆவலுடன் உள்ளேன்.
தமிழக் மீனவர் பிரச்சினை விவாதிக்க...
தமிழக மீனவர்கள் ஒரு ஜான் வயிற்றுக்காக கடலில் செல்லும் மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாம் என்று இலங்கை அதிபர் சீறிசேனாவிடம் கோரிக்கை விடுக்க நேரம் கேட்டுள்ளேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.