ரஜினிகாந்த் தூத்துக்குடி அல்லது காவிரி டெல்டாவில் போட்டியிட வேண்டும்.. அரசியலில் இறங்கினால்!
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த் உண்மையிலேயே அரசியலுக்கு வருவாரேயானால், கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால், தேர்தலிலும் போட்டியிடும் தைரியமான முடிவை எடுப்பார் என்றால் அவர் காவிரி டெல்டா அல்லது தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் அவரது உண்மையான பலம் மக்களுக்குத் தெரிய வரும்.
நான் பச்சைத் தமிழன், கிருஷ்ணகிரி மாவட்டம்தான் எனது சொந்த மாவட்டம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார் ரஜினிகாந்த். இதனால் அவர் அந்த மாவட்டத்தில்தான் ஏதாவது ஒரு தொகுதியில் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என ரசிகர்கள் கருத ஆரம்பித்துள்ளனர். இதற்காக வேப்பனஹள்ளி என்ற தொகுதியையும் ரஜினிகாந்த் தரப்பு யோசித்து பணியாற்றி வருவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
இதெல்லாம் இருக்கட்டும். முதலில் அவர் அரசியலில் எப்போது இறங்கப் போகிறார் என்பது தெரியவில்லை. கட்சி ஆரம்பிப்பாரா என்பதும் தெரியவில்லை. ஆரம்பித்தாலும் தேர்தலில் போட்டியிடுவாரா என்றும் தெரியவில்லை. ஒரு வேளை இதெல்லாம் நடந்தால் ரஜினிகாந்த் போட்டியிடும் தொகுதி இதுவாக இருந்தால் நல்லாருக்கும் என்று சில யோசனை வருகிறது. இதை ரஜினிகாந்த் தரப்பு பரிசீலிக்கலாம்.
தலைவர்.. சோனியா காந்தியா.. ராகுலா.. ஏன் இத்தனைக் குழப்பம்.. ஏப்ரலில் முடிவு தெரியும்
காவிரி டெல்டா தொகுதி
தமிழகத்திலேயே மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதி எது என்றால் காவிரி டெல்டாதான். ஒரு காலத்தில் நாட்டுக்கே சோறு போட்ட பிராந்தியம். இன்று ஹைட்ரோகார்பன், கெய்ல், புயல் என சுற்றிச் சுற்றி அடி வாங்கி வீழ்ந்து கிடக்கிறது. கர்நாடகத்தின் துரோகம் ஒரு பக்கம், அரசியல் செய்தே வஞ்சித்த தலைவர்கள் மறுபக்கம்.. பயிர் இழப்பால் செத்து மடியும் விவசாயிகள் இன்னொரு பக்கம் என யாருமில்லாத அனாதைகள் போல காணப்படுகிறது காவிரி டெல்டா. இங்கு ரஜினி ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும்.
தூத்துக்குடியில் நிற்கலாமே
அது வேண்டாம் என்று கருதினால் தூத்துக்குடியில் ரஜினி போட்டியிடலாம். மாசுக்களில் சிக்கி வாழ்வதற்கே தகுதியில்லாத பல பகுதிகளை உள்ளடக்கியதுதான் தூத்துக்குடி. ஒரு பக்கம் ஸ்டெர்லைட். இன்னொரு பக்கம் வேறு மாதிரியான வேதி மாசு என தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் தூத்துக்குடி மக்கள் படும் அவதிகள் சொல்லி மாள முடியாதது. ஸ்டெர்லைட்டுக்காக விலை மதிப்பற்ற மனித ரத்தத்தைப் பார்த்த பூமிதான் தூத்துக்குடி. ரஜினி கூட சமூகவிரோதிகள் புகுந்து விட்டனர் என்று சொன்ன ஊரும் தூத்துக்குடிதான். இங்கு ரஜினி போட்டியிட வேண்டும்.
குமரியில் நிற்கட்டும்
அதேபோல இன்னொரு மாவட்டத்தையும் ரஜினி பரிசீலிக்கலாம். அதுதான் கன்னியாகுமரி மாவட்டம். புயல்களில் சிக்கி சீரழிந்து, உதவிக்குக் கூட யாரும் வர மறுத்து, மத பாகுபாடுகளால் சீர்குலைந்த மாவட்டம் கன்னியாகுமரி. எங்களை மீண்டும் கேரளாவுடன் சேர்த்து விடுங்கள் என்று மக்கள் கதறிய மாவட்டம். புயல் பாதித்த இந்த பூமியை சரி செய்ய ரஜினி வந்து போட்டியிடலாம். மக்களும் ஆர்வமாகவே காத்திருக்கிறார்கள் ரஜினி காந்த்தை சந்திக்க.. எனவே இந்த பகுதியையும் ரஜினி பரிசீலிக்கலாம்.
ராமநாதபுரம் காத்திருக்கிறது
இன்னொரு பகுதி ராமநாதபுரம். தமிழகத்தின் தண்ணீர் இல்லாக் காடு என்று அழைக்கப்பட்ட பூமி. எந்த தொழில் வளர்ச்சியும் இல்லை. வறட்சிக்கோ அளவே இல்லை. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால் மீண்டும் உயிருடன் வருவோமா என்பது உத்தரவாதம் இல்லாத ராமேஸ்வரத்தை உள்ளடக்கிய மாவட்டம். மீனவர்கள் உயிருக்கு கொஞ்சம் கூட மதிப்பு தெரியாத, தர விரும்பாத இலங்கைக்கு எதிராக ஒரு துரும்பையும் இதுவரை இருந்து வரும் மத்திய அரசுகள் செய்ததில்லை. ரஜினிகாந்த் கூட மீனவர்கள் படுகொலைகள் குறித்து எதுவும் பேசியதாகவும் தெரியவில்லை. இங்கு ரஜினி ஒரு தொகுதியில் போட்டியிடலாம்.
தமிழர்களிடம் வாருங்கள்
இப்படிப்பட்ட தொகுதிகளில்தான் ரஜினி போட்டியிட வேண்டும். இங்கு போட்டியிட்டால்தான் அவரது பலத்தை அவர் உள்பட அனைவருமே அறிந்து கொள்ள முடியும். மாறாக தனக்கு மிக மிக பாதுகாப்பான, பிற சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதியாக பார்த்து பத்திரமாக போட்டியிட்டால் அவரை ஒரு வட்டத்துக்குள் சுருக்கி விடுவார்கள். ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால் தமிழகம் முழுமைக்கும் சொந்தமானவர் என்று கருதினால், அவர் மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் பதில் கொடுத்தது போல இருக்கும்.
தலைவர் செய்வாரா....?