பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் சொல்வதை விஜயிடமிருந்து ரஜினி கற்றுக் கொள்ளட்டும் - அமீர் பொளேர்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ளட்டும் என்று அமீர் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
அரியலூர் : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, இன்று அதிகாலை 1 மணியளவில், துப்பாக்கிச்சூட்டில் பலியான ஸ்னோலின் என்கிற 17 வயது பெண்ணின் வீட்டிற்கு நடிகர் விஜய் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கினார்.
நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உதவி வழங்கிய செய்தியை பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக யாருக்கும் தொந்தரவு தராமல், இரவு நேரத்தில் ஆறுதல் சொல்லச் சென்றதை பலர் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசுக்கு எதிராகப் பேசிய வழக்கில் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இயக்குநர் அமீரிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் வழங்கியது நல்ல விஷயம்.
அதே நேரம் ரஜினி போல ஆர்ப்பாட்டமாக இல்லாமல், அமைதியான முறையில் விஜய் தூத்துக்குடி சென்று ஆறுதல் தெரிவித்து இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை ரஜினிகாந்த், விஜயிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.