இலங்கைக்கு ரஜினி செல்லக் கூடாது என்பதே தமிழர்களின் விருப்பம்... ராமதாஸ் சொல்கிறார்
இலங்கையில் நடைபெறவுள்ள இலவச வீடுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள என்பதே தமிழர்களின் விருப்பமாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம்: இலங்கையில் நடைபெறவுள்ள இலவச வீடுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார்.
நடிகர் ரஜினி காந்த் இலங்கைக்கு சென்று சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸும், இலங்கைக்கு ரஜினி செல்லக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் திரைப்பட தயாரி்ப்பாளர் ஒருவர் வவுனியாவில் 150 வீடுகளை கட்டியுள்ளார்.
அந்த திரைப்பட தயாரிப்பாளர் ராஜபட்சவின் பினாமி என்று கூறப்படுவதால் அவரது விழாவில் ரஜினி காந்த் கலந்து கொள்ளக் கூடாது. இலங்கை மீது தமிழர்களின் கோபத்தை தணிக்கவே இந்த விழாவுக்கு ரஜினி அழைக்கப்பட்டிருக்கிறார். எனவே இந்த விழாவை அவர் தவிர்க்க வேண்டும் என்பதே தமிழர்களின் வேண்டுகோள் என்றார் ராமதாஸ்.