யாரும் தப்பா நினைக்க கூடாது.. ரஜினிகாந்த் அதிமுகவுக்கு சொன்ன 'அந்த' அட்வைஸ்
Recommended Video
சென்னை: அதிமுக ஆண்டு விழாவுக்கு எம்ஜிஆர் போட்டோ அருகே, கலைஞர் போட்டோ வைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னையில் காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவர் மகனும் நடிகருமான, உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது:
யாரும் தப்பா நினைக்க கூடாது. அதிமுக ஆண்டு விழாவுக்கு புரட்சி தலைவர் (எம்ஜிஆர்) போட்டோ வைக்கிறார்கள். அதற்கு பக்கத்திலேயே கலைஞர் போட்டோ வைக்க வேண்டும். அவரை (எம்ஜிஆரை) அந்த கட்சியில் இருந்து நீக்கினார். அதன் பின்னால் யார் யார் இருந்தார்கள், யார் யார் தூண்டிவிட்டார்கள் என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு தெரியும். எத்தனையோ வஞ்சனைகளை அவர் உடன் பிறப்புகளுக்காக எதிர்கொண்டார்.
இருட்டில்இருந்த சரித்திர நாயகர்களை எல்லாம், பல்லவர், பாண்டியர் என பலரையும் பாமரர் முதல் பண்டிதர் வரை தனது எழுத்தால் கொண்டு சேர்த்தவர் கலைஞர். எம்ஜிஆரை ஸ்டார் ஆக்கியது, கருணாநிதி வசனத்தில் வெளியான, மலைக்கள்ளன் திரைப்படம். ஒரே திரைப்படத்தில் சிவாஜியை சூப்பர் ஸ்டாராக்கியதும் கலைஞர்தான்.
கலைஞர் மறைவை தாங்க முடியவில்லை. டிவியில் பார்த்தேன். கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், கோபாலபுரம் சென்றேன். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் திரும்பிவிட்டேன். ராஜாஜி ஹாலில் சென்று, கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன். அப்போது சில ஆயிரம் பேர்தான் இருந்தனர். இவ்வளவு பெரிய தலைவருக்கு இவ்வளதான் கூட்டமா என்று நினைத்து வீட்டில் வந்து படுத்தேன். தூங்கி முழித்து மதியம் 1 மணிக்கு பார்த்தேன். டிவியில் அலை அலையாக கூட்டம் வந்தது. அதை பார்த்ததும், தமிழர்கள் நன்றி மறக்காதவர்கள் என நினைத்து எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.