என்னோடு நட்பு கொள், அல்லது எதிர்கொள்.. கருணாநிதியின் அரசியல் காய்நகர்த்தல் இது.. ரஜினிகாந்த் பேச்சு
Recommended Video
சென்னை: என்னோடு நட்பு கொள் அல்லது என்னை எதிர்கொள் அப்போதுதான் அரசியல் செய்ய முடியும் என்று சதுரங்கத்தில் காய் நகர்த்தியவர் கருணாநிதி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னையில் காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கருணாநிதி உருவ படத்துக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர்.
நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவர் மகனும் நடிகருமான, உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது:
கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. கலைஞர் இல்லாத தமிழகம் ஒரு பெரிய அடையாளத்தை இழந்துள்ளது. மற்ற மாநிலத்தில் இருந்தும் டெல்லியில் இருந்தும் தமிழகத்துக்கு வருவோர் ஒரு பெரியவர் உள்ளாரே, அவரை சென்று சந்தித்து விட்டு செல்ல வேண்டும் என்று இனி யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
45 வயதில் கழகத்தின் தலைமை ஏற்று 50 ஆண்டுகளில், எத்தனை சோதனைகள், எத்தனை சூழ்ச்சிகள் உண்டு. ஐம்பது வருடங்களாக மேடை போட்டு தன்னந்தனியாக அரசியல் செய்ய வேண்டும் என்றால், முதலில் என்னோடு நட்புகொள் அல்லது என்னை எதிர்கொள், அப்போதுதான் அரசியல் செய்ய முடியும் என்று அரசியல் சதுரங்கத்தில் காய்களை போட்டவர் கருணாநிதி.
அவரால் அரசியலுக்கு வந்தவர்கள் பல்லாயிரம் பேர்கள். அவரால் தலைவரானவர்கள் பல நூறு பேர்கள். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.