ரஜினிக்கு உள்ளாட்சித் தேர்தல்தான் முதல் டார்கெட்… நற்பணி மன்றக் கொடி.. சின்னம்.. அசைன்மெண்ட் ரெடி
தமிழகத்தில் வர உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதுதான் ரஜினிக்கு முதல் டார்கெட்டாம். அதற்காக நற்பணி மன்றத்தின் பெயரில் கொடி மற்றும் சின்னம் பெற ஜோரான ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
சென்னை; கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
5 நாட்கள் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வந்த அவர், கடைசி நாளில் உரையில், அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.
தனிக்கட்சி
இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதியாகிவிட்டது என்று ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் உறுதியாக கூறியுள்ளார். அதே போன்று ரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல்
ஆனால் தனிக் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே, தமிழகத்தில் வர உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ரஜினி தயாராகி வருகிறார். ஜூன் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், உடனடியாக நடக்க தேர்தலில் கால் வைத்து ஆழம் பார்க்க நினைகிறார் ரஜினி.
கொடி, சின்னம்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ரசிகர் மன்றப் பெயரில் கொடி மற்றும் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரஜினி ரசிகர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ள ரஜினி, சின்னம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
களத்தில்..
தனிக்கட்சி தொடங்கி சட்டசபைத் தேர்தலை சந்திக்கும் முன்பாகவே ரசிகர் மன்றத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்க் கொள்ளத் தயாராகிவிட்டன ரசிகர் மன்றங்கள். ஏற்கனவே பல முறை ரஜினி ரசிகர்கள், மன்றத்தின் சார்பாக இல்லாமல் சுயேட்சியாக உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளனர் என்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது.