தமிழக மக்கள் பிரச்சனைகளில் மவுனம் காத்த ரஜினிகாந்த்... இனியாவது வாய்ஸ் கொடுப்பாரா?
Recommended Video
சென்னை: தமிழகமே வாழ்வாதாரத்துக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் நடத்தும் போராட்டங்கள் எதிலும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை தராதவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது அரசியல் கட்சியை தொடங்கும் நிலையிலாவது ஜீவாதார பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பாரா? என்பது தமிழக மக்களின் கேள்வி.
நடிகர் ரஜினிகாந்த் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் கட்சியை தொடங்குவேன் என்றார். ஆனால் அரசியலுக்கு வரும் முன் அனைவரும் செய்ய வேண்டிய அடிப்படை பணி எதையும் அவர் இதுவரை செய்யவில்லை. மக்கள் பிரச்சனைகள் தொடர்பான போராட்டங்களில் நேரடியாக பங்கேற்க நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அந்த விவகாரங்களில் அட்லீஸ்ட் வாய்ஸ் கொடுத்திருக்கலாம்.
ரஜினிகாந்த் நடிகராக மட்டும் இருந்திருந்தால் அவர் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பும் அல்ல. அதே நேரத்தில் நான் அரசியலுக்கு வருவேன் என்று பல வருடங்களாக கூறிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் தமிழர்களின் உரிமை போராட்டங்களில் நிச்சயம் பங்கெடுத்திருக்க வேண்டும். அது தான் நேரடியாக அரசியலில் களமிறங்கும் முன் யாரும் செய்திருக்க வேண்டிய வேலை. அந்த வகையில் தமிழகம் சந்தித்த ஏராளமான பிரச்சனைகளில் அவர் கடந்த காலங்களில் குரல் கொடுத்திருக்க வேண்டும்.
அதிர்ந்து போன பாஜக தலைகள்.. ரஜினிக்கு எதிராக கொதித்தெழுந்த அதிமுக அமைச்சர்கள்.. செம திருப்பம்!
நீட் விவகாரம்
நீட் தேர்வு என்பது தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவுக்கு கொள்ளி வைத்திருக்கும் ஒன்று. இந்த கொடூர நீட் தேர்வுக்கு எதிராக அரியலூர் அனிதா தன் உயிரையே மாய்த்துக் கொண்டார். அனிதாவின் மரணத்தால் இந்த மண்ணே அழுது புரண்டு கொந்தளித்தது. ஆனால் வாய்ஸ்மேன் ரஜினிகாந்த் மியூட் மோடில் இருந்தார். ஹைட்ரோகார்ப்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக நெடுவாசல் தொடங்கி ஒட்டுமொத்த தமிழகமும் போராடியது. தஞ்சை பெருவளநாடு பாலைதேசமாகுமே என பதறித்துடித்தது தமிழகத்து பட்டிதொட்டிகள். ஆனால் தமிழகத்தை ஆள விரும்பும் ரஜினிகாந்த் இந்த விஷயத்திலும் அமைதி காத்துவிட்டார்.
சமூகவிரோதிகள் பேச்சு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100 நாட்கள் போராட்டம் நடந்த போது துடிக்காதவர் ரஜினிகாந்த். ஆனால் போலீஸ் துப்பாக்கிகள் துடிதுடிக்க 13 உயிர்களை படுகொலை செய்த போது மவுனம் கலைத்தார். அப்போதும் கூட மக்களின் பக்கம் நின்று பேசாமல், சமூக விரோதிகளால்தான் வன்முறை என்று பேசி விமர்சனத்துக்கு உள்ளானார். ஒட்டுமொத்த தமிழகமே வறட்சியில் கோரப்பிடியில் சிக்கியது. 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் செத்து மாண்டு போனார்கள். டெல்லி வீதிகளில் நிர்வாணமாக ஓடி ஓடி நிவாரணம் கேட்டார்கள். கிஞ்சித்தும் மத்திய அரசு திரும்பிப் பார்க்கவில்லை. இந்த பாரா முகம் கண்டு வெகுண்டெழுந்தவராகவும் இல்லை ரஜினிகாந்த்.
பிரச்சனைகள்தான் எத்தனை
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் ஆகாத விஷயம் ஒன்றை கிளறி தமிழகத்து சுயமரியாதையை சீண்டி இருக்கும் இப்போதும் கூட தஞ்சை தரணியில் போராட்ட முழக்கங்கள் கேட்காமல் இல்லை.. ஹைட்ரோ கார்பன் வேண்டாம்! தமிழிலேயே தஞ்சை பெருவுடையாருக்கு குடமுழுக்கு நடத்து என கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.. குமரி முதல் காஷ்மீர் வரை சி.ஏ.ஏ.வுக்கும் என்.ஆர்.சிக்கும் எதிராகவும் நித்தம் நித்தம் போராட்டங்கள் நடக்கின்றன. அதிலும் கூட ரஜினிகாந்தின் நிலைப்பாடு மெளனமே. டாஸ்மாக், ஊழல்கள், பொள்ளாச்சி கற்பழிப்புகள், சாதி பிரச்சனைகள், காசு கொடுத்து ஓட்டு வாங்குவது, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகள்.. என தமிழக பிரச்சனைகளின் லிஸ்ட் மிகப் பெரியது.
ரஜினி பதில் சொல்லனும்
இதுபோல எத்தனையோ பிரச்சனைகளில் ரஜினி அமைதி காத்துவிட்டு, பெரியார் விவகாரத்தை அவரே திடீரென பேசிவிட்டு, இது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டபோது, இது மக்கள் மறக்க வேண்டிய விஷயம் என்பதற்காக பேசினேன் என்கிறார். ஒருவரின் முகத்தில் அறைந்துவிட்டு, யாரும் இப்படி அறையக் கூடாது என்பதற்காக சொன்னேன் என்பது மாதிரி இருக்கிறது அவரது பேச்சு. இதுவரை ரஜினிகாந்த் வெறும் நடிகராக இருந்ததால் அவரை நோக்கிய கேள்விகள் குறைவாகவே இருந்தன. அவர் கொண்டாடப்பட்டு மட்டுமே வந்தார். இனி அவர் ஏராளமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு வந்திருக்கிறார்.
இதுதான் காரணம்
பெரியாரை வைத்து அவர் தொடங்கி வைத்திருக்கும் இந்த அரசியல் நுழைவு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. சேலம் தி.க. மாநாட்டில் நடந்ததில் பாதியை மட்டும் சொல்விட்டு, மீதியை ரஜினி சொல்லாமல் விட்டது அவர் மீதான விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது. மறைக்கப்பட்ட அல்லது ரஜினிக்கே தெரியாத மீதி உண்மையை சமூக வலைத்தளங்களில் மக்கள் புட்டுப் புட்டு வைத்துவிட்டனர். ''நானே சொன்னாலும் அதை அப்படியே ஏற்காதே.. என்னை கேள்வி கேள். உன் புத்திக்கு சரியாக தோன்றாத எதையும் செய்யாதே'' என்றவர் பெரியார்.
இனி தப்பி ஓட முடியாது
இனி ரஜினியை நோக்கி நிறைய கேள்விகளும் பாயும்.. ஏர்போர்ட் பேட்டிகள், வீட்டுக்கு வெளியே 2 நிமிட திடீர் பேட்டிகள் மூலம் மட்டும் ரஜினி அரசியலில் வென்றுவிட முடியாது. இது ராமராவ், எம்ஜிஆர் காலம் அல்ல. நிறைய கேள்வி கேட்கும் விவரமான மக்கள், இளம் தலைமுறையினர் நிறைந்த காலம். இது சமூக வளைத்தள யுகம். இங்கே யாரும் எதையும் மறைக்க முடியாது. பாதி உண்மையை மட்டும் பேசிவிட்டு தப்பவும் முடியாது. இது ரஜினிக்கு மட்டுமல்ல, எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும்.
மவுனமாக இருக்க முடியாது
பத்திரிகை, தொலைக்காட்சி, இணையத்தள ஊடககங்களைத் தாண்டி சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் பொருள்.. அதில் இளைய தலைமுறையினர் கேட்கும் கேள்விகள், அவர்கள் எழுப்பும் அறிவார்ந்த கருத்துக்களை ரஜினிகாந்த் உள்பட அரசியல்வாதிகள், 'எதிர்கால' அரசியல்வாதிகள் ஆக விரும்புவோர் படிக்க வேண்டியது மிக அவசியம். தனக்கு சவுகரியப்பட்டால் வாய்ஸ் கொடுப்பது, சவுகரியப்படாவிட்டால் மெளனம் காப்பது எல்லாம் நடிகராக இருக்கும்போது மட்டும் கிடைக்கும் வாய்ப்பு. அரசியல் என்று வந்துவிட்டால், இனி எல்லா பிரச்சனைகளிலும் ரஜினிகாந்த் கருத்து சொல்லியே ஆக வேண்டும்.