குருமூர்த்தியின் ஆரூடம்... கழகங்கள் இல்லாத 'கலக' அரசியலை நோக்கி தமிழகம்?
பாஜகவும் ரஜினிகாந்தும் இணைந்தால் திராவிட அரசியலுக்கு அது சவாலாக இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
Recommended Video
சென்னை: திராவிட அரசியல் கட்சிகள் வலுவை இழந்து கொண்டிருக்கும் சூழலில் "பாஜக ப்ளஸ் ரஜினி" எனும் வியூகம் கழகங்கள் இல்லாத கலகங்கள் நடந்தேறும் அரசியல் வரப்போகிறது என்பதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.
தேசிய சித்தாந்தத்தை தமிழக மண்ணில் துடைத்தெறிந்தது திராவிட அரசியல். 1967-ல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திராவிட அரசியல் கட்சிகளிடம் இருந்து தற்போது வரை செங்கோலை தேசிய சக்திகளால் பறிக்க முடியவில்லை.
தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் திராவிட கட்சிகளின் துணை இல்லாமல் தமிழகத்தில் தேர்தல் களத்தை சந்திக்க முடியாது என்பதுதான் கள நிலைமையாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக சட்டென திராவிட அரசியலின் வானிலை மாற்றம் கொண்டுவிட்டது.
அதிமுக எதிர்காலம்
திராவிட கட்சிகளின் ஆளுமைகளில் ஒருவரான ஜெயலலிதா காலமானார். இதனால் அதிமுக எனும் பேரியக்கம் சட்டென கபளீகரம் செய்துவிட்டது மத்தியில் ஆளும் பாஜக. பாஜகவின் நிழல் கட்சியாகவே அதிமுகவும் அதன் அரசும் இயங்கி வருகிறது.
திமுகவில் சலசலப்பு
திமுக தலைவர் கருணாநிதி முதுமையால் முழுமையான ஓய்வில் இருக்கிறார். அவரை அடுத்த திமுக தலைமையும் 2-ம் கட்ட தலைவர்களும் குறைந்தபட்சம் பாஜகவோடு எந்த காலத்திலும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என பட்டவர்த்தனமான 'தினகரனை' போல போட்டுடைக்கவும் தயாராக இல்லை. திமுகவை திராவிடர் இயக்க தத்துவார்த்த அடிப்படையிலான கட்சியாக பின்னாளில் வளர்த்தெடுக்காமல் போனதன் விளைவுதான் இந்த ஊசலாட்டம். இதனை பாஜக பயன்படுத்திக் கொண்டு இப்போதே அரசல் புரசலாக சலசலப்புகளை திமுகவில் திணித்து வருகிறது.
ஆன்மீக அரசியல்
இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்திருக்கிறார். அதுவும் பாஜகவின் குரலாக ஆன்மீக அரசியல் எனும் முழக்கத்துடன்.. இது திராவிட அரசியலுக்கு மாற்று என்பதை திமுக தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது.
தினகரனின் வெற்றி
ஆனாலும் திமுக எந்த அளவுக்கு பாஜகவுக்கு எதிர்ப்பு நிலையில் உறுதியாக இருக்கிறதோ அதனடிப்படையில்தான் அதன் எதிர்காலம் வலிமையாக இருக்க முடியும். தினகரனை பாஜகவின் எதிர்ப்பு முகமாக பார்த்ததும் அவரது ஆர்.கே.நகர் வெற்றிக்கு ஒரு காரணம் என்பதை உணர வேண்டும்.
திராவிடத்துக்கு சவால்
இப்போது பகிரங்கமாக பாஜக ப்ளஸ் ரஜினிகாந்த் அரசியலை அக்கட்சியின் தமிழக ஆலோசகராக கருதப்படும் குருமூர்த்தி பகிரங்கப்படுத்தியுள்ளார். அதிமுக அடிபணிந்து போய்விட்ட நிலையில் திமுக வலுவுடன் எதிர்க்காத நிலையில் பாஜக ப்ளஸ் ரஜினியின் வியூகம் திராவிட அரசியலுக்கு சவாலை ஏற்படுத்தவே வாய்ப்புள்ளது.
கலக அரசியல் வரும்?
திமுகவின் வாக்கு வங்கி சேதாரம் இல்லாமல் இருக்கிறது; இருக்கும் என்கிற சமாதானம் இன்னும் எத்தனை காலத்துக்கு ஏற்புடையதாக இருக்கப் போகிறது என்பதும் தெரியாது. குருமூர்த்தி போன்றவர்களின் கணிப்புகளும் வியூகமும் கழகங்களின் அரசியலுக்கு முடிவுகட்டி ஒருவித கலக அரசியலை தமிழகத்தில் அரங்கேற்றக் கூடும் என்பதற்கான எச்சரிக்கையாகவே குருமூர்த்தியின் பேச்சு பார்க்கப்படுகிறது.