மறக்க முடியாத 2002.. 17 வருஷமாச்சு.. ஆறுகளும் இணையல.. அவர் சொன்னதையும் மறக்க முடியலை!
ஒரு கோடி ரூபாய் தருவதாக ரஜினி அறிவித்து 17 வருடங்கள் ஆகிறது
சென்னை: இதே மாசம்.. இதே நாள்.. ஆனா வருஷம் மட்டும் 2002.. ஒரு சின்ன பிளாஷ்பேக்
வள்ளுவர் கோட்டமே அன்று ஸ்தம்பித்து காணப்பட்டது. ஜனநெருக்கடி, போலீசார் பந்தோபஸ்து.. தள்ளுமுள்ளு நிலை.. அங்கே மேடையில் ரஜினி உண்ணாவிரதம் உட்கார்ந்து இருக்கிறார். "தமிழகத்திற்குக் காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்துவிட வேண்டும்" இதுதான் ரஜினியின் கோரிக்கை!
ரஜினிக்கு அப்போது செம மாஸ்.. பாபா படம் வெளிவந்த புதுசு.. மூப்பனாரின் ஓவர் சப்போர்ட்.. ப.சிதம்பரத்தின் நெருக்கம்.. என்றிருந்தார் ரஜினி. இந்த உண்ணாவிரதம் ரஜினியின் அரசியலுக்கான துவக்க புள்ளியாகவே அன்று பார்க்கப்பட்டது.. கவனிக்கப்பட்டது!
''நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் முதல்ஆளாக நான் அளிப்பேன்'' என்று செய்தியாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாக அறிவித்தார். அந்த நாள் இந்த நாள்தான்!
ஆன்மீகம் மட்டும்தான் இருக்கு.. அரசியல் எங்க பாஸ்? ரஜினியின் இமயமலை டிரிப்பிற்கு இதுதான் காரணமா?!
விவசாயிகள்
17 வருஷங்கள் உருண்டோடி விட்டன.. முதல் ஆளாக பணம் தருவேன் என்று சொன்ன ரஜினி இன்னும் அந்த பணத்தை தரவில்லை. பணம் தர்றதா ரஜினி சொன்னாரே, அது என்னாச்சு என்று ரஜினி அண்ணன் சத்யநாராயணாவிடம் பலமுறை கேட்கப்பட்டது. ரஜினி கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி ரூபாயை உடனே கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகளும் மிரட்டவே ஆரம்பித்தனர்.
சத்யநாராயணா
அதற்கு ரூ 1 கோடி நிதியை, ரஜினிகாந்த் அப்போதே வங்கியில் டெபாசிட் செய்துவிட்டார் ரஜினி என்றும், அந்தப் பணம் மத்திய அரசு நதிகள் இணைப்பை அறிவித்த உடனே முழுவதும் அப்படியே நதிகள் இணைப்பு திட்டத்துக்கு போகுமாறு ஏற்பாடு செய்துள்ளார் ரஜினி" வாயடைத்தார் சத்யநாராயணா!
காவிரி பிரச்சனை
உண்மையிலேயே நதிநீர் இணைப்பு சாத்தியமா? நதிகள் இணைப்பு என்பது எத்தனை வருஷம் ஆனாலும் நடக்கவே நடக்காத ஒரு காரியம், அந்த தைரியத்தில்தான் ரஜினி இப்படி அறிவிப்பு வெளியிட்டாரா என்பதுதான் சந்தேகமாவே 17 வருடங்களை தாண்டி வந்து கொண்டே இருக்கிறது. உண்மையிலேயே ரஜினிக்கு நதிநீர் இணைப்பு மேல் அக்கறை என்றால், கர்நாடகாவில் காவிரி பிரச்சனையின் போது தமிழர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட போது எதற்காக மவுனம் காத்தார் என்ற கேள்வியும் நம்மிடம் எழவே செய்கிறது.
குடையும் கேள்வி
ரஜினி அறிவித்த பணத்தை கட்டாயப்படுத்தியோ, நிர்ப்பந்தப்படுத்தியோ வலுக்கட்டாயமாக யாரும் வாங்க முடியாது. அது அவரது சொந்தவிருப்பம் என்றாலும், இப்படி ஒரு அறிவிப்பை ரஜினி வெளியிட வேண்டிய அவசியம் ஏன்? என்ற கேள்வி பல வருஷங்களாகவே மக்களை குடைந்து வருகிறது.
அரசியல் பார்வை
ரஜினியின் அரசியல் வருகை பத்தின பேச்சு வரும்போதெல்லாம் அவரது படங்களை ஓட வைப்பதும், அதை வைத்து கல்லா கட்டுவதும், இதற்கு பிறகு இமயமலைக்கு பறந்து செல்வதும் என வருடங்கள் உருண்டோடி வருகின்றன. இன்றுவரை எளிமை, ஆன்மீகம், கலந்த ஒரு சர்க்கரை கரைசலில் உள்ளது ரஜினியின் அரசியல் பார்வை.
உயிர் கிடைக்குமா?
இது இந்துத்துவாக்கு ஆதரவானதா, பாசிசத்துக்கு எதிரானதா என்ற ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், இந்த 1 கோடி ரூபாய் அறிவிப்பும் அதனுடன் இணைந்தே பயணித்து வருகிறது. தற்போது ரஜினியின் அரசியல் பயணம் அடுத்த ஆண்டு தொடங்கப் போவதாக புதிய பரபரப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்திலாவது ரஜினியின் இந்த 1 கோடி ரூபாய் அறிவிப்புக்கு ஏதாவது உயிர் கிடைக்குமா என்று காத்திருப்போம்.