ராஜீவ்காந்தி கொலை வழக்கு : தாயாரை சந்திக்க கோரும் முருகனின் கோரிக்கை மனு ஹைகோர்ட்டில் நிராகரிப்பு!
ராஜீவ் கொலையில் தொடர்புடைய முருகன் சிறை அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பார்வையாளர்களை சந்திக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் தனது தாயாரை சந்திக்க கோரிய அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீஹரன் என்னும் முருகன் 26 ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ளார். கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முருகனின் அறையில் இருந்து 2 செல்போன்கள்,சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முருகனை அவரது மனைவியும் ஆயுள் தண்டனைக் கைதியுமான நளினி உள்ளிட்ட பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டது.
மகனை சந்திக்க முடியவில்லை
3 மாதங்களுக்கு இந்தத் தடை நீடிக்கும் என்று ஜெயில் நிர்வாகம் கூறியுள்ள நிலையில், இலங்கையில் இருந்து முருகனை சந்திக்க வந்த அவரது தயார் சோமணிக்கு முருகனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
கோர்ட்டில் உருக்கம்
இந்நிலையில் கடந்த 5ம் தேதி சாமியார் தோற்றத்தில் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டார் முருகன். அப்போது தாயார் சோமணி போலீசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் தனது மகனின் கைகளை பிடித்து முத்தமிட்டார்.
அனுமதி கோரி மனு
இந்நிலையில் மே 29ம் தேதி முருகனின் தாயார் இலங்கை செல்ல வேண்டியுள்ளதால் அதற்குள் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது சிறை விதிகளுக்கு புறம்பாக முருகன் தனது அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்ததாகவும் அவரின் அறையில் இருந்து 2 செல்போன் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்நிலையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும் மே 27ம் தேதிக்குள் தாயார் சோமணி முருகனை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் முருகன் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற கோடைகால நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. இதனால் பார்வையாளர்கள் முருகனை சந்திப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.