ராஜீவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு 2 வார நிபந்தனை சிறைவிடுப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் சிறைவிடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய 2 வார சிறை விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் தம்மை ஒரு மாதம் பரோலில் விடுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். சொத்து விவகாரத்தில் பாகப்பிரிவினை செய்ய பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டியுள்ளது, பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்டவற்றிற்காக இந்த பரோலை ரவிச்சந்திரன் கோரி இருந்தார்.
பேரறிவாளன் போல தமக்கும் உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். ரவிச்சந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தமிழக அரசு, சிறைத்துறையும் தொடர்ந்து பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் இன்று நிபந்தனைகளுடன் கூடிய 2 வார சிறை விடுப்பு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
யாரிடமும் பேசக்கூடாது, எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது, மீடியாக்களை சந்திக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.