தமிழகத்தில் இருந்து விடுதலைப் புலியான ஆயுள்கைதி ரவிச்சந்திரனின் சிவராசனின் சீக்ரெட் நூல் நாளை ரிலீஸ
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சிவராசன் டாப் சீக்ரெட் என்ற நூல் சென்னையில் நாளை வெளியிடப்படுகிறது.
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் எழுதிய சிவராசனின் டாப் சீக்ரெட் என்னும் நூல் சென்னையில் நாளை வெளியிடப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று ராஜீவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் 25 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளவர் ரவிச்சந்திரன். இந்த வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனால் ரவிச்சந்திரன் 28.1.1998 முதல் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார்.
ஏகலைவன் தொகுத்து வழங்கும் புத்தகம்
இந்நிலையில் சிறையில் இருந்தபடியே ரவிச்சந்திரன் "இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்" நூலை எழுதியுள்ளார். இந்த நூலை நளினியின் சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பா. ஏகலைவன் தொகுத்து வெளியிடுகிறார்.
நாளை புத்தகம் வெளியீடு
சென்னை வடபழனியில் நாளை புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நூலை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் வெளியிடுகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுச்சாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
எதிர்பார்ப்பின் உச்சத்தில்
ராஜீவ்காந்தி படுகொலையில் முக்கிய பங்காற்றியவர் சிவராசன் என்பது இது தொடர்பான விசாரணை தொடங்கிய காலம் முதலே உள்ள குற்றச்சாட்டு. சிவராசன் தலைமையில் தான் ராஜீவ் படுகொலைக்கான அனைத்து திட்டங்களும் தீட்டப்பட்டதாக இன்றளவும் சொல்லப்பட்டு வரும் நிலையில், சிவராசனின் டாப் சீக்ரெட் என்ற தலைப்பில் வெளியாக உள்ள இந்த நூலில் என்னென்ன விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வருமா?
ஏற்கனவே ஏகலைவன் தொகுத்து வழங்கிய நளினி சுயசரிதை புத்தகத்தில் பிரியங்கா, ராகுல் காந்தி சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகி பரபரப்பு கிளம்பியது. இந்நிலையில் நாளை சிவராசனின் டாப் சீக்ரெட் புத்தகம் வெளியிடப்படுகிறது, அநேகமாக இந்த புத்தக கண்காட்சியிலேயே இந்த புத்தகம் விற்பனைக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.