7 பேர் விடுதலைக்கு தடை: சென்னையில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடிய தமிழக காங்கிரஸார்
சென்னை: சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை தமிழக காங்கிரஸார் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் அறிவித்தார். இந்நிலையில் அந்த 7 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்ட தமிழக காங்கிரஸார் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை சின்னமலை அருகே இருக்கும் ராஜீவ் காந்தி சிலைக்கு காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த தீர்ப்பை அவர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்த கொண்டாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது குறித்து கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் தமிழக அரசு சட்டப்படி உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதை வரவேற்று காங்கிரஸ் கட்சியினர் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்கிறோம் என்றார்.