நிறைய அனுபவித்துவிட்டேன்.. சிறகடிக்க உதவுங்கள்.. மத்திய அரசுக்கு சாந்தன் உருக்கமான கடிதம்!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். தனக்கும் ராஜிவ் கொலைக்கும் தொடர்பில்லை என்று சாந்தன் விளக்கம் அளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். மிகவும் கொடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது தனது வக்கீல் ராஜகுரு மூலமாக மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உண்மையை சொல்கிறேன்
அவர் தனது கடிதத்தில் நான் சுதேந்திரராஜா என்கிற சாந்தன். உங்கள் எல்லோரிடமும் உண்மையை சொல்லி விடுகிறேன். நான் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்ய சதியுடன் இந்தியாவிற்குள் வரவில்லை. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்வது தான் என் நோக்கம்.
வழக்கமாக இருந்தது
அப்போது எல்லாம் இலங்கை தமிழர்கள் பலரும் கொழும்பு வழியாக வெளிநாடு செல்லாமல் இங்கு வந்து தான் வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருந்தனர். அதனால்தான் நானும் வந்தேன். இங்குவரும் போது இலங்கையில் என் மீது குற்ற வழக்குகள் எதுவும் கிடைத்தது. இதுகுறித்து தெளிவாக அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட பிறகு எனக்கு பாஸ்போர்ட்டுடன் அளிக்கப்பட்டது. இதை வைத்துதான் சிபிஐ நான் இலங்கை குடிமகன் என நிரூபித்தது.
யார் வருவார்
நீங்களே சொல்லுங்கள், சர்வதேச அளவில் பிரபலமான ஒரு தலைவரை கொல்ல வரும் வெளிநாட்டவன் யாராவது தன்னை குறித்த உண்மையான தகவல்கள் அடங்கிய பாஸ்போர்ட்டை கொண்டு வருவானா? இந்த வழக்கில் இன்னொரு சாந்தனும் குற்றவாளியாக உள்ளார். தடா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வக்கீல் வாதிடும்போது, விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளருக்கு நான் பணம் கொடுத்ததாக கூறினார். ஆனால் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும்போது என்னை அடையாளம் காட்டவில்லை. இன்னொரு சாந்தனின் போட்டோவை காட்டினார்.
தீர்ப்பு என்ன
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பக்கம் 558-ல், இந்த வழக்கில் 19-வது எதிரியாக சேர்க்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்ட ஒருவரிடம், விரைவில் ஒரு முக்கியமான தலைவரை கொல்லப்போவதாக நான் சொன்னதாக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், பக்கம் 157-ல் அது அடுத்த சாந்தன் என்றிருக்கும். இப்படி இதில் நிறைய குளறுபடிகள் தீர்ப்பில் இருக்கிறது.
சிறை
புலனாய்வு அதிகாரிகள் இப்போது சொல்லும் உண்மையை பற்றியோ, 1999-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள தவறுகள் பற்றியோ நான் இப்போது வெளிக்கொணர விரும்பவில்லை. பழையவற்றை புறந்தள்ளிவிட்டு பயணப்படவே விரும்புகிறேன். நான் இப்போது ஆன்மீகம், இலக்கியம் என்று இருக்கிறேன். ஆனால் இன்னும் சிறையில்தான் சிக்கி தவிக்கிறேன்.
சிறகடித்து செல்ல வேண்டும்
2011-ம் ஆண்டில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டபோது நோயாளியான என் அப்பா, தூக்கு தண்டனை ரத்து என்ற 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை அறியும் முன்னரே இறந்துவிட்டார். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமான தண்டனையா என்று தெரியவில்லை. வயோதிக தாயாருக்காவது மகனுக்கான கடமைகளை செய்ய விரும்புகிறேன். என்னுடைய உறவுகளுடன் என்னை சேர்த்து வைக்க மத்திய அரசால் முடியும். என்னுடைய சிரமம் மிகுந்த சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள், என்றுள்ளார்.