சோகத்தில் ராஜீவ் காந்தியோடு பலியான தமிழர்கள் குடும்பத்தார்
சென்னை: ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை குறித்துக் கொண்டாடுபவர்கள், அந்தப் படுகொலையின் போது உயிரிழந்த மற்ற அப்பாவித் தமிழர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பற்றி ஏன் கவலைப் படவில்லை என கண்ணீர் மல்க கேள்வி எழுப்புயுள்ளனர் பாதிக்கப் பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டு சிறையில் வாழ்ந்து வரும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் நெற்று முந்தினம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று தமிழக அரசு குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தது.
அரசின் இந்த முடிவை தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். சேலத்தில் ஒரு காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் கூட செய்து கொண்டது.
பலரை மகிழ்ச்சியடைய செய்த இந்த அறிவிப்பு சிலரை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், ராஜீவ் படுகொலையின் போது அவரோடு சேர்ந்து பலியான அப்பாவித் தமிழர்களின் குடும்பத்தினர் தான் அவர்கள்.
இது குறித்து, ராஜீவ் காந்தி வருகையின் போது அவருக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று, பரிதாபமாக உயிரிழந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி பால சரஸ்வதி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:-
என் கணவரும் பச்சைத் தமிழர் தான்...
என் கணவரும் பச்சை தமிழர் தான். காவல்துறையில் அப்பழுக்கற்ற வகையில் மிக துணிச்சலாக பணியாற்றிய அதிகாரி. மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது மரணமடைந்தார்.
நிற்கதியாக நின்றோம்....
அந்த நேரத்தில் நானும், எனது மகள் பபிதா தேவி, மகன் பிரவீன் ராஜேஷ் ஆகியோர் நிற்கதியாக நின்றோம். அப்போது என் மகள் பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்தாள். மகன் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். என் கணவருக்கு அப்போது வயது 44.
ஆறுதல் கூற யாருமில்லை...
தூக்கு தண்டனை கைதிகளுக்காக முழக்கம் எழுப்பிய தலைவர்கள் எங்களுக்கு ஆறுதல் கூற வரவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில்தான் எனது கணவருக்கு முழு பென்சன் அளித்து உத்தரவிடப்பட்டது. அதன் காரணமாகத்தான் எங்கள் குடும்பம் தத்தளிக்காமல் வாழ்க்கை நடத்த முடிந்தது.
எங்களுக்கு என்ன பதில்..?
விடுதலை உத்தரவை மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினரும் இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த என் கணவர் மற்றும் அவரைப்போன்ற மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் என்ன பதிலை கூறப்போகிறார்கள்?.
மத்திய அரசின் பாராமுகம்....
ராஜீவ்காந்தியோடு உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு கருணை உதவிகளை செய்துள்ளது. மத்திய அரசாங்கம் இதுவரை திரும்பி பார்க்கவில்லை. இனிமேலாவது எங்கள் குடும்பத்தை போன்ற மற்றவர்களுக்கும் உதவிகளை செய்ய நினைக்க முன்வருவார்களா?' என இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எங்களுக்கு நீதி இல்லையா...?
அதேபோல், ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது பலியான காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி.முகமது இக்பாலின் மகன் ஜாவீத் இக்பால் கூறியதாவது:-
நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களின் தண்டனையை ரத்து செய்தது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும். அவருடன் கொல்லப்பட்ட 14 பேர்களின் குடும்பங்களுக்கு என்ன நீதி வழங்கப்போகிறார்கள்.
எங்களுக்காக குரல் கொடுக்கவில்லையே....
நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் தான். அதுவும் தமிழர்கள் தானே. சிறையில் இருந்தவர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு சில அரசியல் கட்சியினர், எங்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?
சிந்திப்பீர்களாக..?
வரும் காலங்களிலாவது நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும் குரல் கொடுக்க அரசியல் கட்சியினர் தயங்க கூடாது. அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களிடம் நம்பிக்கையை அரசியல் கட்சிகள் பெற முடியும். இந்த தீர்ப்பை கேட்ட என்னுடைய வயதான தாயார் இதை நினைத்து மேலும் வருந்தும் சூழல் தான் ஏற்பட்டு உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.