நாளை கூடுகிறது அமைச்சரவை.. 7 தமிழர் விடுதலை, குட்கா ரெய்டுகள்.. உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்
தமிழக அமைச்சரவை நாளை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவம் நிலையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.
தமிழகமே தற்போது பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. இதில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது 7 தமிழர்கள் விடுதலை, மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் ஊழல் சம்பவங்கள்.
அவசியம் இல்லை
ஆனால் இந்த விவகாரத்தில், அமைச்சர் பதவி விலக வேண்டும், அல்லது தமிழக அரசே அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி கண்டன எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. ஆனாலும், "தற்போது ரெய்டுதான் நடந்துள்ளது? நீதிமன்றம்தானே ஒருவரை குற்றவாளியா என்பதை முடிவு செய்யும். நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும்வரை அனைவரும் நிரபராதிகளே, அதுவரை அமைச்சரை பதவி நீக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது.
நிராகரிப்புகள்
அடுத்ததாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் விடுதலை குறித்த விவகாரம். இவர்கள் 7 பேருமே கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். கருணை அடிப்படையில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இரண்டு முறை கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், அவை இரண்டுமே நிராகரிக்கப்பட்டன.
ஆளுநரே முடிவு
இதனால் 7 பேரும் தங்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்கள். இதுகுறித்த விசாரணை ஒரு வருடத்திற்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிபதிகள் இதுகுறித்து வழங்கினார்கள். அதில், 7 பேர் விடுதலைக் குறித்து தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும், அதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறி வழக்கையும் முடித்துவைத்தனர்.
சட்ட நிபுணர்கள்
இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்கையில், "அமைச்சரவையை கூட்டி விவாதித்து, சட்டநிபுணர்களின் ஆலோசனையும் பெற்று 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்" என கூறியிருந்தது. எதிர்க்கட்சிகளும் உடனடியாக அமைச்சரவையை கூட்ட வேண்டும் என கடந்த 2 தினங்களாக வலியுறுத்தி வந்தன.
அமைச்சரவை கூடுகிறது
இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது. பேரறிவாளன் உட்பட 7பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது. இதனால் இவர்களின் விடுதலை குறித்து அமைச்சரைவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது. அதன்பின்னர், 7 பேரின் விடுதலை குறித்து அறிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை கூடவுள்ள அமைச்சரவை கூட்டம் தமிழக வரலாற்றிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த கூட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.