லீவு நாளில் அமைச்சரவை கூடியது இதற்குத்தானா? தமிழக அரசு இப்படி செய்யலாமா.. ஆளுநரின் அதிர்ச்சி அறிக்கை
Recommended Video
சென்னை: முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் கால, நேரம் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் சட்டப் பிரிவு 161கீழ் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவு எடுத்தது.
ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட முடிவு அன்றைய தினமே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
விடுதலை எதிர்பார்ப்பு
இதையடுத்து திங்கட்கிழமையில் இருந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விடுதலை தொடர்பான அறிவிப்பு வெளிவரலாம் என்று மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை ஆளுநர் மாளிகை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இந்த விவகாரம் தொடர்பாக பரிந்துரை அனுப்பியுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆளுநர் மாளிகை
மத்திய உள்துறை அமைச்சகம் சட்ட வல்லுனர்கள் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு விரைவிலேயே ஆளுநருக்கு நல்ல பதில் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இருந்தது. ஆனால் இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு இந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போக செய்துள்ளது.
தாமதம்
இதுவரை எந்த ஒரு பரிந்துரையையும் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் மாளிகை அனுப்பவில்லை என்று, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்க கூடியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் கூடி 7 பேரை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசு, ஏன் இந்த தாமதத்தை செய்தது என்ற கேள்வி எழ ஆளுநர் அறிக்கை காரணமாக அமைந்துள்ளது.
தமிழக அரசின் தாமதம்
ஏனெனில் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பான நகல், உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை தமிழக அரசு, ஆளுநர் மாளிகைக்கு நேற்றுதான் சமர்ப்பித்துள்ளது என்று ஆளுநர் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் அரசு துரித கதியில் இந்த விஷயத்தை அணுகுவதாகவும், ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவையை கூட்டி உள்ளதன் மூலம், அரசு இந்த விஷயத்தில், கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். ஆனால் அரசு முழு ஆவணங்களையும் நேற்றுதான் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளது என்ற தகவல் ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.