சமாதான தூதராக இருந்ததாலேயே ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்... ப.சி. உருக்கம்
ராஜீவ் காந்தி சமாதான தூதராக இருந்ததாலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மகாத்மா, ஆபிரகாம் லிங்கன் ஆகியோரை போல ராஜீவ் காந்தியும் சமாதான தூதராக இருந்ததாலேயே படுகொலை செய்யப்பட்டார் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீ பெரும்புதூரில் குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று அவரது நினைவு தினமாகும்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள வீர பூமியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதே போல் தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் 26-ஆவது ஆண்டு நினைவு தினத்தை நேற்று அனுசரித்தனர். ஆங்காங்கே உள்ள கட்சியினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் சட்டசபை எம்எல்ஏ-க்கள் குழுத் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது ப.சிதம்பரம் ராஜீவ் காந்தி குறித்து பேசுகையில் கண் கலங்கினார். அவர் பேசுகையில், மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், ஜான் கென்னடி உள்ளிட்டோர் சமாதான தூதராக இருந்ததாலேயே அவர் கொல்லப்பட்டார்.
அந்த வரிசையில் ராஜீவ் காந்தியும் சமாதான தூதராக இருந்ததால் சிலர் போராளிகளால் கொல்லப்பட்டார். சமாதான பேச்சுவார்த்தை நடத்திருந்தால் சுயாட்சி உரிமை, மொழி உரிமை, சம குடியுரிமை உள்ளிட்டவை கிடைத்திருக்கும். ஆனால் அதற்குள் அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். அவரது சமாதானத்தை சிலர் விரும்பவில்லை என்பதுதான் உண்மை என்றார் அவர்.