அதிமுகவும், திமுகவும் இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றன: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தமிழகம் வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பிரசாரம் மேற்கொண்டார். இதன் பின்னர் சென்னை மயிலாப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், இலவசங்கள் என்ற போர்வையில் தமிழக மக்களை திமுகவும், அதிமுகவும் ஏமாற்றி வருகின்றன. இலவசங்கள் மக்களின் வரிப்பணத்தில் இருந்து வருகின்றன. திமுக மற்றும் அதிமுகவின் சொந்தப் பணத்தில் இருந்து இலவசங்கள் கொடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் மட்டும் ரூ.11, 500 கோடி அளவிற்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இலவசங்களை மறந்து பொருளாதார ரீதியான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டால் தமிழகம் வளம் பெறும். மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினால் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும்.
இலவசங்கள், டாஸ்மாக் எனப் பேசியே திராவிட கட்சிகள் தமிழக மக்களை சுரண்டி ஏழைகளாக்க முயற்சிக்கின்றன. இதற்கு தமிழக மக்கள் பலியாகாமல் யோசித்து தங்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். இலவசங்களால் நமது வாழ்வாதாரப் பிரச்சினைக்கு தீர்வு ஏதும் நிகழ்ந்துள்ளதா எனவும் ராஜ்நாத்சிங் கேள்வி எழுப்பினார்.