இலவசங்களைக் காட்டி திராவிடக் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன!- ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டி
ராமநாதபுரம்: இலவசங்களைக் காட்டி தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றன திராவிடக் கட்சிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மக்களை கால்பந்துபோல் பந்தாடியுள்ளன.
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது பலம் வாய்ந்த கட்சியாக பாஜக உள்ளது. எங்களது கரத்தை வலுப்படுத்தினால், தமிழகத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டுவோம்.
தேர்தல் நேரத்தில் திராவிட கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து ஆட்சிக்கு வருவது வழக்கமாகி விட்டது. தமிழக மக்கள் இலவசங்களை தவிர்த்து சுயமாக முன்னேற வேண்டும். இலவசங்களைக் காட்டி மக்களை திராவிடக் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. இயற்கை வளங்கள் நிறைந்த தமிழகம் முன்னேறவில்லை என்றால் அதற்கு திராவிட கட்சிகளின் இலவசத் திட்டங்கள்தான் காரணம்.
தமிழகத்தில் இதுவரை இலவச திட்டங்களுக்கு ரூ.11,500 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை வைத்து 25 ஆயிரம் பள்ளிகள் திறந்து இருக்கலாம்.
தமிழகத்தில் மின் பற்றக்குறை தீர்ந்து விட்டால் தொழிற்சாலைகள் பெருகும். அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். பல ஆயிரம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள். மின்சார உற்பத்தியில் அதிமுக அரசு மெத்தனம் காட்டுகிறது. தமிழகத்தில் மின் பற்றாக்குறைக்கு இதற்குமுன் ஆட்சி செய்த அரசும், அவர்கள் அங்கம் வகித்த காங்கிரஸ் அரசும் முக்கிய காரணம்.
சென்னை வெள்ளத்தால் பாதித்த மக்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டு உடனடியாக ரூ. 2 ஆயிரம் கோடியை நிவாரணத் தொகையாக வழங்கினார். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தி தடுத்து நிறுத்தினார். எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லக் கூடாது என இலங்கை அரசை நிர்பந்தம் செய்தார்," என்றார்.