தலைவா.. உடனே மாநாடு போடுங்க... ரஜினிக்கு பேஸ்புக் மூலம் ஒரு ரசிகர் கடிதம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சும்மா இருந்தாலும் சிலர் சும்மா இருப்பதில்லை. எதையாவது நோண்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அந்த வகையில் ரஜினிகோட்டை என்ற பெயரிலான ஒருபேஸ்புக் பக்கத்தில் ரஜினி ரசிகர் என்ற பெயரில் ஒரு அழைப்பு வெளியாகியுள்ளது.
அதில் நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக மாநாடு நடத்த வேண்டும் என்று அந்த ரசிகர் கோரிக்கை வைத்துள்ளார். மாநாடு எப்போது நடக்கும் என்ற தேதியை அறிந்து கொள்ள தான் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்தக் கடிதம் குறித்த விவரம் வருமாறு:
ரஜினிக்கு ஒரு ரசிகனின் கடிதம் !
அன்புத் தலைவா....! வணக்கம். உங்கள் நலமே எங்கள் பிராத்தனை. மலேசியாவில் நீங்கள் செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு கிடைக்கிறது, மகிழ்ச்சி !கொட்டும் மழையிலும் உங்களைக் காண குடையுடன் காத்திருக்கின்றனர். யாரையும் தடுக்காமல் அன்போடு அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறீர்கள், கட்டியணைக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி !!
தமிழகத்தில் நடக்கவில்லை
தலைவா, தலைவா என சாலையில் கூக்குரலிடும் ரசிகர்களுக்காக பிரச்சார வேன் போன்ற ஒரு வாகனத்தில் தோன்றி கை அசைத்து தலைக்கு மேலே கையை உயர்த்தி வணக்கம் தெரிவிக்கும் அந்த கண்கொள்ளா காட்சிகளை தமிழ்நாட்டில் நாங்கள் காணும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை. இருக்கட்டும் நாங்களும் அதை எதிர்பார்க்கவில்லை. அது நடக்கும் போது நடக்கட்டும்.
வெள்ளம் வந்தபோது
இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வெள்ளம் குறித்து நீங்கள் அடித்த கமெண்ட் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டபோது, ரஜினியின் குரல் முதல் முறையாக மக்களால் அசைத்துப் பார்க்கப்பட்டது. ஆம் அவருக்கு வேற வேலையில்ல, படம் வரும்போது மட்டும் இப்படி எதையாவது பேசுவார் என்றும் இன்னும் இதுபோல் ஏராளமான பேச்சுகளையும் எங்கள் காதுபடவே பேசுகிறார்கள். நீங்கள் நல்ல எண்ணத்தில் தான் சொல்லியிருப்பீர்கள், அதில் எந்த மாற்றுக் கருத்தும் எங்களுக்கு இல்லை. ஆனால் மக்களுக்கு இருக்கிறது. இது தான் சமயமென்று சில தீய சக்திகள் உங்களைப் பற்றி தவறாக பரப்புகிறார்கள். விமர்சனங்களை வரவேற்கும் உங்கள் குணம் எங்களுக்கும் இருக்கிறது. படையப்பா வெள்ளிவிழாவில் உங்கள் செயலையும், இன்னும் எத்தனையோ செயல்களையும் மறந்துவிடார்கள். இருக்கட்டும் மறந்த செயல்கள் எல்லாம் பொய் என்றாகிவிடாது. அது மக்களுக்கும் தெரியும்.
தன்னலம் இல்லாத தலைவர்
1996 ஆம் ஆண்டு தேடி வந்த முதல்வர் வாய்ப்பை ஏற்காமல் தூக்கியெறிந்த தன்னலம் இல்லாத தலைவன் நீ என இந்த மக்கள் புரிந்து கொண்டார்கள். அன்றிலிருந்து ஊடகங்கள் உங்களிடம் வைக்கும் முதல் கேள்வி எப்போது அரசியல்? நீங்களும் சலிக்காமல் பதிலளித்துக் கொண்டே இருக்கிறீர்கள் 25 ஆண்டுகளாய்.
வந்தாலும் வராவிட்டாலும்
ஒரு நடிகனுக்கு ரசிகராக இருந்தால் அந்த நடிகர் அரசியலுக்கு வந்து ரசிகர்களுக்கு கைம்மாறு செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் உங்கள் ரசிகன் என்பதும் நீங்கள் வராவிட்டாலும் உங்கள் ரசிகன் என்பதும் மாறப்போவதில்லை. எனவே அரசியலுக்கு நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என வற்புறுத்தவும் இல்லை. எதிர்பார்க்கவும் இல்லை. அப்படி எதிர்பார்ப்பவன் உண்மையான ரஜினி ரசிகனாகவும் இருக்க முடியாது. முன்னர் நிங்கள் வருவீர்கள் என நம்பினோம், இப்போது வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை என நம்புகிறோம்.
இத்தனை வயதிலும்
இத்தனை வயதிலும் படங்கள் ஒப்புக் கொண்டு நடித்து திரையில் தோன்றுவது எங்களுக்காகத்தான் என்பது நன்றாகவே தெரியும். 66 வயதிலும் எங்களுக்காக கஸ்டப்படுகிறீர்கள் அதுவும் தெரியும். இருந்தும் ரஜினி ரசிகர்களையும் அவர்களின் பலத்தையும் சந்தேகிக்கும் மனநிலையும் போக்கும் மக்களிடம் பரவி வருகிறது. அதற்கு காரணம் லிங்கா படத்தின் தோல்வியும் அதன் பின்விளைவுகளும். படங்களின் தோல்வி அதன் தரத்தில் இருக்கிறது எனபது புரிந்தும் இவ்வாறு பரப்பப்பட்டு வருகிறது. நாளை உங்களின் இன்னொரு படம் தோல்வி அடைந்தாலும் அது அந்த திரைப்படத்தின் தோல்வியாக பார்க்கப்படாது. உங்களின் தோல்வியாகத்தான் பார்க்கப்படும் அல்லது பார்க்கவைக்கப்படும். பின் உங்களையும் ஒரு திரையுலக சிவாஜியாக்கும் வேலைகள் நடைபெறக்கூடும்.
கேள்விக்குள்ளாக்கப்படுவது
2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நீங்கள் கட்சி ஆரம்பித்தால் தான் இந்த களங்கம் களையும் என்றெல்லாம் பொய் கூறமாட்டேன். உங்களையும் உங்களின் ரசிகர்களையும் உங்கள் பலமும், உங்கள் ரசிகர்களின் பலமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. சரி இதற்கு நான் என்ன செய்ய என நீங்கள் யோசிக்கலாம். உங்கள் பலத்தை, உங்கள் ரசிகர்களின் பலத்தை ஒரே ஒரு முறை காட்ட முன்வரவேண்டும்.
மாநாட்டைக் கூட்டுங்கள்
அரசியலுக்கு வந்து தான் உங்களின் பலம் காட்டவேண்டும் என்ற அவசியம் இல்லை. படம் நடிப்பது போன்று அது ஒன்றும் கஸ்டமான விசயம் இல்லை என்பதும் உங்களுக்கு தெரியும். அரசியலுக்கு வந்தால் பணபலம், உடல்பலம் எல்லாம் வேண்டும். 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்று வந்த பின்பும் எங்களுக்காக படம் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். எங்களுக்கு உங்கள் உடல் நலமும் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். என்றைக்கும் எங்கள் வழிகாட்டியாக நீங்கள் இருக்க வேண்டும். அதற்கு முன்பாக ஒன்றே ஒன்றை செய்ய வேண்டும்.
ரசிகர்களைச் சந்தியுங்கள்
உங்கள் பிறந்த நாளிலோ அல்லது வேறொரு நாளிலோ நீங்கள் உங்கள் ரசிகர்களை சந்திக்க வேண்டும். அதுவும் இந்த தமிழ்நாட்டில் சென்னை அல்லாத ஒரு நகரத்தில். அரசியல் கட்சிகள் ஓட்டை எதிர்பார்த்து காசு கொடுத்து கூட்டும் அரசியல் மாநாடாக அது இருக்காது. ரஜினி எனும் தலைவனைக் காண, இத்தனை வருடங்களாக அன்பால் நீ சேர்த்த கூட்டத்தைக் காண ஒரு ரசிகர்கள் மாநாட்டை கூட்ட வேண்டும். அதை ஏற்பாடு செய்வது ஒன்றும் பெரிய விசயமெல்லாம் இல்லை, நீங்கள் கண் இமைத்தால் போதும், அதை ஏற்பாடு செய்ய தயாராக இருக்கிறோம். நீங்கள் வந்து எங்களைப் பார்த்து எங்களோடு இருந்து உரையாற்றிவிட்டு சென்றால் போதும்.
வந்தால் மட்டும் போதும்
இன்னும் சொல்லப் போனால், நீங்கள் வந்தால் மட்டும் போதும். நீங்கள் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் இதை மட்டும் செய்து விடுங்கள். உங்களுக்கும் உங்கள் ரசிகர்களான எங்களுக்கும் இந்த உலகத்திற்கும் ரஜினி எனும் தலைவனின் செல்வாக்கை காட்டுவதற்கு நல்லதொரு வாய்ப்பாக இருக்கும். அதன் பிறகு ரஜினி மீதும் ரஜினி கல்லெறிய யாரும் அஞ்சுவார்கள்.
மாநாட்டுக்குத் தடை இல்லையே
நீங்கள் அரசியலுக்கு வருவதில் வேண்டுமானால் பல்வேறு சிக்கல்கள், கஸ்டங்கள், குறைகள் ,நிறைகள் இருக்கலாம். ஆனால் ரசிகர்கள் மாநாட்டை நடத்துவதற்கு எந்தவித தடைகளும் இருக்கப் போவதில்லை. ஒரு முறை ஒரே ஒரு முறை நீங்கள் யோசித்துப் பார்த்தாலே அதற்கான வெற்றியும் சாத்தியமும் எளிதாகிவிடும் . எங்களுக்கு நீங்கள் அது செய்ய வேண்டும் இது செய்ய வேண்டும் என எதிர்பார்த்ததில்லை. இனி எதிர்பார்க்கப் போவதும் இல்லை. ஒவ்வொரு ரஜினி ரசிகனுக்கும் இருக்கும் ஒரு சின்ன ஆசை இது மட்டும் தான். எங்களுக்காக ஒரு முறை யோசித்துப் பாருங்கள் தலைவா....! நீங்கள் நினைத்தாலே நடந்தது போல ........!!!!
நம்பிக்கையுடன்
தலைவர் தன் ரசிகர்களுக்கு அளிக்கும் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக இத்தனை நாள் நாங்கள் எதிர்பார்த்தது கட்சிப் பெயரை. இன்று நாங்கள் எதிர்பார்ப்பது ஒன்றெ ஒன்றுதான். மாநாட்டுத் தேதி....! செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
உங்கள் அன்பு ரசிகன்.