3 ராஜ்ய சபா எம்பி சீட்டு.. அதிமுகவில் இப்போதே கடும் போட்டி.. தேமுதிகவும் மல்லுகட்டுது!
சென்னை: ஏப்ரலில் காலியாகும் 3 எம்பி பதவியை பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. அதேநேரத்தில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவும் ஒரு சீட் கேட்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா, டிகே.ரங்கராஜன், ஏ.கே.செல்வராஜ், திருச்சி சிவா, விஜிலா சத்யானந்த், எஸ்.முத்துகருப்பன் ஆகியோரின் பதவி காலம் வரும் ஏப்ரல் 3ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தலா 3 எம்பிக்களை ராஜ்யசபாவுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்க முடியும்.
வேலை இருந்தா பாருங்கடா... என்னடா இப்படிக் கிளம்பிட்டீங்க.. கஸ்தூரிக்கு சிரிப்பைப் பாருங்க!
தோல்வி
இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே உள்ளதால் அதிமுகவில் ராஜ்யசபா எம்பி பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தோற்றுப்போனதால் அவர்கள் ராஜ்ய சபா எம்பி சீட்டை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்கள்.
தென் மாவட்டங்கள்
கடந்த முறை ராஜ்யசபா தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களில் இருந்து தான் ஜெயலலிதா 3 எம்பிக்களை தேர்வு செய்தார். எனவே இந்த முறையும் தென்மாவட்டங்களில் இருந்து தான் 3 எம்பிக்களையும் தேர்வு செய்ய வேண்டும் என அதிமுகவில் கோரிக்கை எழுந்து வருகிறது. ‘
எம்பி சீட் கேட்டு
இப்போது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த யாரும் அமைச்சராக இல்லை. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த யாரும் அமைச்சராக இல்லை. எனவே இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினருக்கு எம்பி பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அந்த பகுதியில் இருந்து எழுந்துள்ளது.
எடப்பாடிக்கு நெருக்கம்
சென்ற முறை ராஜ்யசபா எம்பி பதவியை அதிமுக தனது கூட்டணி கட்சியான பாமகவுக்கு கொடுத்தது. இதன் காரணமாக அன்புமணி எம்பியாக உள்ளார். இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான சேலம் மாவட்டம் ஒமலூரைச் சேர்ந்த சந்திரசேகரன் (தலித் சமூக என்பவருக்கு எம்பி பதவி வழங்கப்பட்டது. இதேபோல் முன்னாள் அமைச்சர் முகமது ஜான் என்பவருக்கும் எம்பி பதவி வழங்கப்பட்டது.
அதிமுகவில் குழப்பம்
இந்நிலையில் கடந்த முறை பாமகவுக்கு வழங்கியது போல் இந்த முறை தங்களுக்கு எம்பி சீட் வழங்க வேண்டும் என்று தேமுதிகவும் ஒரு பக்கம் நெருக்கி வருகிறது. அதிமுகவிலேயே ஏற்கனவே எம்பி பதவியை பிடிக்க கடும் போட்டிநிலவுகிறது. அத்துடன் தேமுதிகவும் நெருக்குவதால் யார் யாருக்கு 3 ராஜ்யசபா எம்பி சீட்டுகளை ஒதுக்குவது என அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது.
எப்போது தேர்வு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தேர்தல் சமயத்தில் அதிமுக தலைமை கூடி எம்பி பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எம்பி பதவியை பிடிக்க பலரும் இப்போதே அதிமுக தலைமையிடம் நெருக்கி வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.