பெண் மீது வெறித்தாக்குதல்.. ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்... கனிமொழி ஆவேசம்
மதுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று ராஜ்ய சபா எம்பி கனிமொழி ஆவேசமாக கூறியுள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்தனர். போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர்.
இதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் போலீஸ் தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
வலுக்கும் எதிர்ப்பு
மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை வன்முறை களமாக மாற்றிய போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பும் கண்டனமும் வலுத்து வருகிறது. இதற்கு ராஜ்ய சபா எம்பி கனிமொழியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுக்கடை எதற்கு?
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: டாஸ்மாக் கடை வேண்டாம் என்று மக்கள் சொல்வதை மீறி ஏன் அரசு அதனை திணிக்க வேண்டும்? இது அடிப்படையிலேயே தவறான ஒரு விஷயம். மக்கள் போராடும் போது மதுக்கடை திறப்பதை நிறுத்திவிட வேண்டும்.
தவறான முன்னுதாரணம்
அதனை நிறுத்தாமல் போராடும் மக்களை தாக்குவது என்பது தவறான ஒரு நடவடிக்கையாகும். இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. இது கடுமையாக கண்டிக்கத் தக்கது.
பதவி நீக்கம்
நாம் எல்லோரும் குடும்ப வன்முறை சட்டம் குறித்து பேசிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஒரு காவல்துறை அதிகாரி போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணை தாக்குவது கொடுமையானது. நிச்சயமாக அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கனிமொழி கூறினார்.