செவிலியர்களின் கோரிக்கை நியாயமானது.. கனிமொழி
சென்னையில் போராடி வரும் செவிலியர்களை திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி நேரில் சந்தித்தார்.
சென்னை : போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி சந்தித்தார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராடி வருகிறார்கள். நேற்று வரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியவர்கள், இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள்.
அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால், போராட்டம் தொடர்வதாகவும் அவர்கள் அறிவித்து உள்ளார்கள். ஆனால், இதுவரை அவர்களுடன் நேரடியாக எந்த ஒரு அதிகாரியோ, அமைச்சரோ வந்து சந்திக்கவில்லை. மேலும், பொது சுகாதாரத்துறை அவர்களுக்கு பணிக்குத் திரும்பும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான காவல்துறையினர் அங்கு போடப்பட்டு இருக்கிறார்கள். உணவு, குடிநீர்,கழிப்பறை வசதிகளை கூட ஏற்படுத்தாமல் இருப்பதால் செவிலியர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். தொடர்ந்து போராடி வரும் செவிலியர்களை தி.மு.க எம்பி கனிமொழி சந்தித்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, பிற மாநிலங்களில் இதே முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. நியாயமான கோரிக்க்கைக்கு கூட இந்த அரசு செவி சாய்ப்பதாக இல்லை. அதிகாரத்தின் கை கொண்டு அறவழிப்போராட்டத்தை மிரட்டி ஒடுக்கப்பார்க்கிறது. டெல்லியில் சொல்வதைச் செய்வதற்காக மட்டுமே இந்த அரசு இருப்பது போலத் தெரிகிறது.
மேலும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளும் இந்தக் களத்தில் உள்ளனர். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறது இந்த அரசு. இதுவரை எந்த அமைச்சரும் இவர்களைச் சந்திக்கவில்லை. இந்தப் போராட்டத்தில் தி.மு.க செவிலியர்களுக்கு முழு ஆதரவு அளித்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தி.மு.க சார்பில் குரல் எழுப்புவோம் என்று தெரிவித்தார்.