சிலைக்கு ராக்கி கட்டிய அக்கா... மறைந்தும் மனதில் வாழும் தம்பி!
சென்னை: நாடு முழுவதும் சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் என்னும் பாச வெளிப்பாட்டின் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் உச்சக்கட்ட நெகிழ்ச்சியின் வெளிப்பாடு சட்டீஸ்கரில் நடந்துள்ளது.
ரக்ஷா பந்தன்... ராக்கி கட்டுவது... சகோதர பாசத்தின் வெளிப்பாடு.. இதையும் தாண்டி இந்த விழாவின் அர்த்தம் என்ன? மையம் என்ன? காரணம் என்ன? இதோ உங்களுக்காக ஒரு குட்டி சம்பவம்!
மகாபாரத போரின் உச்சம். போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு கையில் அடிபட்டு விட்டது. ரத்தம் பொலபொலவென கொட்டிக் கொண்டே இருந்தது. எவ்வளவு தடுத்தும் ரத்தம் நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது. இதை பாத்த திரௌபதியோ பதறிபோய்விட்டார். உடனே தனது புடவையின் ஒரு பகுதியை கிழித்து அவரது கையில் கட்டினார். உடனே கொட்டிக் கொண்டிருந்த ரத்தம் நின்றுவிட்டது. இதற்கு பிறகுதான் இவர்கள் இருவருக்கும் இடையே பாசம் பீறிட்டு எழுந்தது. அதனால்தான் எப்போவெல்லாம் திரௌபதிக்கு பிரச்சனை என்றாலும் கிருஷ்ணர் ஓடிவந்துவிடுவார்.
ரக்ஷா பந்தன் கதை
தன் சகோதரனுக்கு கையில் துணியை கட்டி ரத்தத்தை நிற்க செய்ததன் அடிப்படையிலேயே இந்த விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. அதனால்தான் இது வடமாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது. ஆனால் இப்போதுள்ள இளைஞர்கள் தென்னிந்தியாவிலும் இதை கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஒருசிலர் ஒரு ஃபேஷன், ஸ்டைல், என்ற முறையில் இதை கொண்டாடுகின்றனர். விழாவின் முழு அர்த்தம் புரிந்து நம் இளைஞர்கள் இதை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பரிசுபொருள் எங்கே?
இந்தவிழாவின்போது, பெண்கள் யாரையெல்லாம் தங்களுடைய சகோதரர்களாக நினைத்து கொள்கிறார்களோ அவர்களின் கையில் நூல்கள் அல்லது மெல்லிய கயிறுகளை கட்டி விட்டு மகிழ்வார்கள். இந்த நூல் பல டிசைன்களில் பல பல கலர்களில் இப்போதெல்லாம் விற்பனை வந்துவிட்டன. இப்படி தங்கள் கையில் கட்டிவிட்டுவிட்டால், அந்த சகோதரிகளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என ஆண்கள் உறுதி எடுத்து கொள்வர். இப்படி உறுதிமொழியோடு பெண்கள் விட்டுவிடுவார்களா என்ன? பரிசு பொருள் ஏதாவது கொடுத்தே ஆகணும் என்று செல்ல பிடிவாதம் பிடித்து ஒற்றைக்காலில் நின்று அதை வாங்கியே விடுவார்கள்.
மணல் சிற்பம்
இன்றைய ரக்ஷா பந்தன் நாளை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் ஒரே கொண்டாட்டம்தான்! ராஜஸ்தானில் பஸ்ஸில் செல்லும் எல்லா பெண்களுக்கும் இன்று ஃப்ரீயாம். அரசின் ஒரே இலவச இன்ப அதிர்ச்சியில் பெண்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்! நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து இன்று இரவு 12 மணி வரை 24 மணிநேரத்திற்கு பெண்கள் மாநிலத்தின் எந்த பஸ்ஸிலும் இவர்கள் செல்லலாம்! அதேபோல, ஒடிசா மாநிலத்தில் பூரி கடற்கரையில் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்னாயக், ஒரு மணற்சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில், சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் கரம் கோர்ப்போம் என வலியுறுத்தியுள்ளார்.
உயிரிழந்த சகோதரன்
உயிரிழந்த சகோதரன் இதைவிட உச்சக்கட்ட ரக்ஷா பந்தன் பாச வெளிப்பாடு, சட்டீஸ்கரில் நடந்துள்ளது. மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் 2014-ம் ஆண்டு ராஜேந்திர குமார் என்ற பாதுகாப்பு படை வீரர் மரணடைந்துவிட்டார். இவருக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவர் பெயர் சாந்தி. தன் தம்பி மீது சாந்திக்கு உயிர்! அவ்வளவு பாசம்!! அதனால் தன் வீட்டு வளாகத்திலேயே தன் தம்பிக்காக ஒரு சிலையும் இவர் வைத்திருக்கிறார். இன்று ரக்ஷா பந்தன் என்பதால், தனது சகோதரன் நினைவு அதிகமாகவே அவரை வாட்டி போட்டது. உடனே ராக்கி கயிறை எடுத்து கொண்டு, சகோதரனின் சிலைக்கு ராக்கி சாந்தி ஆரத்தி எடுத்தார். பின்பு ராக்கி கயிறை தன் தம்பியின் சிலைக்கு தனது அன்பை கொட்டியிருக்கிறார் அந்த சகோதரி!
பாசத்தின் வெளிப்பாடு
கிருஷ்ணர்-திரௌபதி சகோதர பாசத்தை நாம் நேரில் பார்த்ததில்லை... இனி அதற்கு வாய்ப்பும் இல்லை... அதனை படித்தும், கேள்விப்பட்டு மட்டுமே இருக்கிறோம். ஆனால் சிலைக்கு கயிறு கட்டி பாசத்தை கொட்டிய சகோதரியே இன்று நம் கண்முன்னே உயர்ந்து நிற்கிறார்! இதுதான் ரக்ஷா பந்தன்!