ரக்ஷா பந்தன் - சகோதர சகோதரிகளின் பாசத்தை உணர்த்தும் விழா உற்சாகக் கொண்டாட்டம்
சகோதர, சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
சென்னை: சகோதரத்துவ திருவிழா எனப்படும் ரக்ஷா பந்தன் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டியும், பரிசுப் பொருட்களை வழங்கியும் பாசத்தை வெளிப்படுத்தினர்.
வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் திருவிழா அண்ணன் தங்கை, அக்கா, தம்பி ஆகியோரின் ரத்த பந்தத்தை வலுப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. சகோதர பந்தத்தை எடுத்துக்கூறும் இந்த ரக்ஷா பந்தன் தினம் இந்துக்களின் பண்டிகை என்பதைத் தாண்டி பாசத்தைக் காட்டும் ஒரு சமூக விழாவாகவே இருந்து வருகிறது.
ரக்ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு' என்றும், 'பாதுகாப்பு பந்தம்' என்றும் பொருள். இந்த நாளில், ஓர் ஆண் ரக்ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாகக்கொண்டு அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகாப்பிற்கும், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும்.
பாசத்திருவிழா
ஆதிகாலத்தில் சுத்தமான மஞ்சள் கொண்டு, பட்டு நூல்களைப் பயன்படுத்தி ராக்கிகளை, கட்டத் தொடங்கினர். தற்போது காலத்திற்க்கேற்ப தங்கம், வெள்ளி மற்றும் பட்டு நூல் இலைகள் என புதுப்புது வடிவங்களில் ராக்கிகள் செய்யப்பட்டு விற்பனையாகிறது.ரக்ஷா பந்தனை முன்னிட்டு வட இந்தியா முழுவதும் பெரும்பாலான கடைகளில் விதவிதமான வடிவங்களில் ராக்கி கயிறுகள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் சகோதர, சகோதரிகளின் பாசத்தை பகிரும் வகையில் புதிய வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ரக்ஷாபந்தன்
மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரவுபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த ரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக்கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரவுபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீய சக்திகளிடமிருந்தும், பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார். கண்ணன் கையில் திரவுபதி கட்டிய துணியே முதல் ராக்கியாகக் கருதப்பட்டது. அதுதான் ரக்ஷா பந்தனின் தொடக்கமாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு பிணைப்பு
ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு' என்றும், ‘பாதுகாப்பு பந்தம்' என்றும் பொருள். இந்த நாளில், ஓர் ஆண் ரக்ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாகக்கொண்டு அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகாப்பிற்கும், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும். அதைப்போலவே கயிறைக் கட்டிய அந்தப் பெண்ணும் அவனுக்கு சகோதரியாகி அவனுடைய நலத்துக்கும், வளத்துக்கும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யும் உறுதியை அளிப்பதாக இத்தினம் எடுத்துக்காட்டுகிறது.
சகோதரர்கள் பாசம்
மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவருக்குமே அண்ணன், தம்பிகள், அக்காள், தங்கைகளின் பாசம் கிடைத்து விடுவதில்லை. ஜென்ம லக்னத்திற்கு 3ஆம் வீடு இளைய சகோதர ஸ்தானம் . 11ம் வீடு மூத்த சகோதர ஸ்தானம் ஆகும். சகோதர காரகன் செவ்வாய். 3ம் அதிபதி 2ல் அமையப் பெற்று குரு பார்வை பெற்றாலும் 2, 3ஆம் அதிபதிகள் இணைந்து பலம் பெற்றாலும் 3ம் அதிபதி செவ்வாய் சேர்க்கையோ, பார்வையோ பெற்று 2ம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் 3, 11ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் உடன் பிறந்தவர்கள் பாசம் நேசத்துடன் இருப்பார்கள். சிலரோ அண்ணன் தம்பிகளுடன் பேசாமல் கூட இருப்பார்கள். அவர்களுக்கு சகோதரபாவம் கெட்டிருப்பதே காரணம். அன்பும், பாசமும் தொடரவே இதுபன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
சகோதரத்துவம்
ஆவணி மாதப் பௌர்ணமி நாளில், கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் திருவிழா இந்து பண்டிகை என்றாலும் கூட, இது மதங்களையும் தாண்டிய நேசத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்த்தெடுப்பதால் தற்போது அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு பல வீடுகளில் சகோதரர்களுக்கு சகோதரிகள் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து ராக்கி கயிறு கட்டி வாழ்த்துக்களை பரிமாறினர். திருமணம், கல்வி, வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் பிரிந்திருந்தாலும் இந்த நாளில் சகோதர சகோதரிகளை பாசத்துடன் நினைவுகூர்ந்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வோம்.