பத்திரிகையாளர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு.. ராம் ரஹீமிடம் இன்று நீதிமன்றம் விசாரணை!
பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்திரபதி உள்பட இருவர் கொலை வழக்கில் இன்று ராம் ரஹீமிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்படுகிறது.
பஞ்ச்குலா: ராம் ரஹீமுக்கு எதிராக பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்திரபதி உள்பட இருவரை கொலை செய்ததாக கூறப்பட்டுள்ள புகாரின்பேரில் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது. இதனால் பஞ்ச்குலாவை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியாணாவில் சிர்சா நகரில் தேரா சச்சா சவுதா என்ற இயக்கத்தின் தலைவரான ராம் ரஹீம், ஆசிரமத்தை நடத்தி வந்தார். இதில் கடந்த 2002-ஆம் ஆண்டு பக்தைகளாக வந்த இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி ராம் ரஹீம் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். அவர் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார்.
வன்முறை வெடித்தது
இதைத் தொடர்ந்து ஹரியாணாவின் சிர்சாவிலும், பஞ்ச்குலாவில் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 38 பேர் கொல்லப்பட்டனர். 264 பேர் காயமடைந்தனர்.
20 ஆண்டுகள் சிறை தண்டனை
இதைத் தொடர்ந்து சுனாரியா சிறைக்கே சென்ற நீதிபதி அங்கு ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தார். இந்நிலையில் ராம் ரஹீம் மீதான கொலை வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெறுகிறது.
இருவர் கொலை
கடந்த 2002-இல் சிர்சாவை சேர்ந்த பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்திரபதி மற்றும் தேரா இயக்கத்தின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் ஆகியோர் ராம் ரஹீமின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டனர் என்ற வழக்கு உள்ளது.
இன்று விசாரணை
இந்த கொலை வழக்கை சிபிஐ சிறப்பு நீதிபதி ஜெகதீப் சிங் விசாரணை நடத்துகிறார். இதனால் ஏற்கெனவே சிர்சாவில் வன்முறை வெடித்ததை போல் இன்றும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பஞ்ச்குலா மற்றும் சிர்சாவை சுற்றி ஏராளமான துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.