சமூக விரோதிகளின் கூடாரமா புதியதலைமுறை டிவி?.. ராம. கோபாலன் கடும் பாய்ச்சல்
சென்னை: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டதா புதிய தலைமுறைத் தொலைக்காட்சி நிறுவனம் என்று கேட்டுள்ளார் இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்குத் தாலி தேவையா? என்ற விவாதத்தை நடத்துவதாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். இந்த விளம்பரத்தில் பெண்களுக்கு தாலி என்பது நாய்க்கு சங்கலி கட்டுவது போல என ஒரு பெண் பேசுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள், இதனைத் தடுத்து நிறுத்த இந்து முன்னணிக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, புதிய தலை முறைக்கும் தங்களது ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நம்முடைய ஆட்சேபணையை தெரிவித்தபோது, நிகழ்ச்சியை ரத்து செய்யமுடியாது எனத் தெரிவித்துவிட்டனர். அதனை அடுத்து, எல்லா மாவட்டங்கள், நகரங்களிலும் காவல்துறையிடம் புதிய தொலைக்காட்சி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் கொடுக்கப்பட்டன.
காவல்துறை அதிகாரிகள், இதற்கு பெரும் ஆட்சேபம் எழுந்துள்ளது என்பதை எடுத்துக்கூறியும், அதனை அலட்சியப்படுத்தி தொலைக்காட்சி அதிகாரிகள் பேசியுள்ளனர்.
இன்று காலை 10 மணி அளவில் மாநிலப் பொதுச் செயலாளர் சி. பரமேஸ்வரன் தலைமையில் சென்னை மாநகர இந்து முன்னணி சார்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர். அலுவலகத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாகவே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி, அனைவரையும் கைது செய்ய முற்பட்டனர். அங்கு ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையில் தடியடி நடத்தினர். அந்த தள்ளுமுள்ளுவை படம்பிடிக்க வந்த பத்திரிகையாளர் காமிரா கீழே விழுந்தது. இதனை திட்டமிட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தது என்பது தற்போது தெரிய வந்ததுள்ளது.
அதன் பரபரப்பு செய்தியில் சமூக விரோதிகள் தாக்குதல், பத்திரிகையாளர் மீது தாக்குதல், காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தனர் என செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். நடந்தது ஜனநாயக வழியிலான எதிர்ப்பு, இதனை திசைத் திருப்பும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், புதிய தலைமுறை தொலைக்காட்சி, மக்கள் விரோதமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் மனு மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இனியும் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் புதிய தலை முறை தொலைக்காட்சி ஈடுபட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு களுக்கு அவர்களே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் எச்சரித்துள்ளார்.